Skip to main content

திருமகன் ஈவெரா சாலையின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்த அமைச்சர்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

erode thirumagan evera road name board inauguration function

 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென மரணம் அடைந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். இதனைத் தொடர்ந்து திருமகன் ஈவெரா நினைவாக அவர் வசித்து வந்த கச்சேரி சாலையை திருமகன் ஈவெரா சாலை எனப் பெயர் மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று திருமகன் ஈவெரா சாலை பெயர்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு திருமகன் ஈவெரா சாலை பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். பின்னர் திருமகன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. பேசும்போது, "நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் துக்கம் வருகிறதா மகிழ்ச்சி தருகிறதா என்று சொல்ல தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் எனது மகனை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த சாலைக்கு எனது மகனின் பெயர் வைக்க காரணம் அமைச்சர் முத்துசாமி தான். முதலமைச்சரை பொறுத்தவரை அவரை எதிர்ப்பவராக இருந்தாலும் கூட அவருக்கு மரியாதை கொடுப்பதில் சிறந்தவர். இந்த நேரத்தில் முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் காலத்தில் நானும் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்றார்.

 

நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசினார். அப்போது அவர் கூறும்போது," திருமகனுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டவுடன் இளங்கோவன் எனக்கு ஃபோனில் தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறினார். இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். அந்த சமயத்தில் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடந்தது. திருமகன் இறந்த செய்தியை நான் முதல்வரிடம் தெரிவித்தேன். அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அன்று இரவே ஈரோட்டுக்கு கிளம்பி வந்து இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் மறுநாள் முதலமைச்சர், திருமகன் நினைவாக நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று என்னிடம் கூறினார். நான் உடனடியாக அவர் வசித்து வந்த கச்சேரி சாலையை திருமகன் ஈவெரா சாலை என பெயர் மாற்றலாம் என்று கூறினேன். அதற்கு முதலமைச்சர் உடனடியாக ஒப்புதல் வழங்கினார். சட்டமன்றத்தில் திருமகன் நடவடிக்கையை முதலமைச்சர் உன்னிப்பாக கவனிப்பார். திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணியை அவரது தந்தை இளங்கோவன் செய்து முடிப்பார்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.