Skip to main content

குவைத் நாட்டில் தவிக்கும் மனைவி  வாட்ஸ் அப்பில் கதறல்- மீட்க கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் கணவன் கண்ணீர்

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 

ஈரோடு கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ் நகரைச் சேர்ந்த நவாஸ் கான் என்பவர் இன்று தனது மகளுடன் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார்.  பிறகு  எஸ் .பி .சக்தி கணேசனை சந்தித்து மனு ஒன்றை  கொடுத்தார்.

 

y

 

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:    ‘’நான் ஈரோடு  கருங்கல்பாளையம் கே .ஏ. எஸ் நகர் பகுதியில் குடியிருந்து வருகிறேன்.  எனது மனைவி பெயர் யாஸ்மின்.  எங்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.  நான் அதே பகுதியில்  டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.

 

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டில் இருந்து வந்த எனது அக்கா மகன் எனது மனைவியை குவைத் நாட்டிற்கு வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறினான். நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறினான்.   இதனை நம்பி நாங்களும் அவனுடன் எனது மனைவி யாஸ்மினை கடந்த ஜனவரி மாதம்  அனுப்பி வைத்தேன்.  

 

குவைத்துக்கு சென்ற எனது அக்கா மகன்,   என் மனைவியை ஒரு வீட்டில் வேலைக்கு அமர்த்தி விட்டு மாலத்தீவுக்கு சென்று விட்டான்.  கடந்த நான்கு மாதமாக எனது மனைவி பற்றி எந்த ஒரு தகவலும் எனக்கு  தெரியவில்லை.  அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.  இதனால் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்து வந்தது.

 

y

 

இந்நிலையில் நேற்று திடீரென எனது மனைவி யாஸ்மின் வாட்ஸ அப் வீடியோ மூலம் என்னை தொடர்பு கொண்டார்.   அப்போது அவர் இங்கு உள்ளவர்கள் என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள்.  சுடு தண்ணீரை உடலில் ஊற்றி கொடுமைப் படுத்துகிறார்கள்.  சம்பளத்தை பற்றி பேசினால் கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார்கள் என்று கூறி கதறினார்.  உடனடியாக காப்பாற்றும் படி கண்ணீர் விட்டு கதறினார்.  என் மனைவி பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைபேசி இணைப்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது.

 

நான் மீண்டும் அந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால்  தொடர்பு கிடைக்கவில்லை.  எனவே தாங்கள்  உடனடியாக தலையிட்டு வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் எனது மனைவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அவர் மனுவில் கூறியிருந்தார்.

 

வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்ற மனைவியை மீட்க கண்ணீருடன் கணவன் கதறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.