Skip to main content

கணவரைக் கொன்று ஏரிக்கரையில் போட்டுவிட்டு வந்தோம்... காதலனுடன் மனைவி பரபரப்பு வாக்குமூலம்!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

Erode

 

தன் காதலுக்குக் கணவர் தடையாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி ஏரிக்கரையில் போட்டுவிட்டு வந்துவிட்டோம் என்று மனைவி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவில் உள்ள கோட்டுபுள்ளாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார். 30 வயதான இவர் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்துமதி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். 

 

இந்தநிலையில் இந்துமதி, "கடந்த 9ஆம் தேதி தனது கணவர் குமார் வெளியே சென்றார். வீடு திரும்பவில்லை என அக்கம் பக்கத்திலும், மாமனார் வீட்டிற்கும் தகவல் சொல்லியுள்ளார்." இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் குமாரை தேடி வந்தனர். குமார் காணவில்லை என்பதைப் பற்றி போலீசில் புகார் அளிக்கலாம் என உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொண்டிருந்த நேரத்தல், ஏரிக்கரையில் ஒரு சாக்குமூட்டையில் குமார் சடலமாகக் கிடந்தார் எனத் தகவல் பரவியது. 

 

இதையடுத்து அங்கு குமாரின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்தனர். இதே போல் தகவல் அறிந்த நம்பியூர் போலீசார் அங்கு வந்தனர். குமாரின் உடலைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறினர். அவரது மனைவி இந்துமதியும் கதறி அழுதார். 

 

போலீசார் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

 

தனிப்படை போலீசார் குமாரின் மனைவி இந்துமதியை விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் கோபி வடுகபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (28) என்பவருக்கும் இந்துமதி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்கள்.

 

போலீசில் இந்துமதி, “கோபியில் உள்ள அட்டை கம்பெனியில் வேலை பார்த்தபோது தானும், குமாரும் காதலித்தோம். பின்னர் திருமணம் செய்துகொண்டோம். பச்சைமலையில் ஒரு வீடு எடுத்து வசித்து வந்தோம். வீடு அருகில் ஒரு லேத் பட்டறை உள்ளது. அங்கு ஸ்ரீதர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது எனக்கும், ஸ்ரீதருக்கும் பழக்கம் ஏற்பட்டுத் தகாத உறவாக மாறியது. இது குமாருக்குத் தெரிந்ததால் என்னைக் கண்டித்தார். பின்னர் நாங்கள் கோட்டுப்புள்ளாம்பாளையத்துக்கு குடி வந்தோம். ஸ்ரீதரும் காதல் திருமணம் செய்துகொண்டவர். அவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

 

http://onelink.to/nknapp

 

ஆனாலும் எனக்கும், ஸ்ரீதருக்கும் பழக்கம் தொடர்ந்தது. அதனால் நானும், ஸ்ரீதரும் சேர்ந்து குமாரை கொல்ல முடிவு செய்தோம். கடந்த 9-ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் குமார் படுத்திருந்தார். அதற்கு முன்னதாகவே ஸ்ரீதர் வீட்டில் வந்து ஒளிந்திருந்தார். படுத்திருந்த குமாரின் முகத்தில் தலையணையால் நான் அமுத்தினேன், ஸ்ரீதர் ஓடிவந்து மரக்கட்டையால் என்கணவரை தாக்கினார். இதில் அவர் இறந்துவிட்டார்.

 

பின்னர் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி வீட்டில் வைத்துவிட்டோம். அன்று நள்ளிரவு ஸ்கூட்டியில் பிணம் இருந்த சாக்குமூட்டையை வைத்து கொண்டுசென்று ஏரிக்கரையில் போட்டுவிட்டு வந்துவிட்டோம்” என வாக்குமூலத்தில் கூறி உள்ளார். 

 

ஸ்ரீதரையும், இந்துமதியையும் கைது செய்த போலீசார் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.