பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்ப் பதிக்கும் பணியின் போது ஏற்பட்ட மண் சரிவினால் தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நLந்துவருகிறது. இன்று மாலை ஈரோடு பழைய கரூர் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 15 அடி ஆழம் தோண்டப்பட்ட குழியில் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் மாநகராட்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் குழாய்ப் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அங்கு திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
அந்தக் குழிக்குள் இருந்த சிலர் தப்பி ஓடிய நிலையில் அதில் ஒருவர் மட்டும் மண்சரிவில் சிக்கி கொண்டார். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், காவல்துறையினர் அங்கு வந்து ஜே.சி.பி. இயந்திர உதவியுடன் மண்ணைத் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அரைமணி நேரத்திற்கு மேல் போராடியும் இறந்த நிலையில் தான் அந்தத் தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் ஈரோட்டில் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இப்படி ஆபத்தான வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடும் அவரின் குடும்பத்திற்கு தேவையான நிவாரனமும் கிடைக்கவேண்டும் என சக தொழிலாளர்கள் கண்ணீருடன் அரசுக்கு வேண்டுகோள் வைத்தனர்.