Skip to main content

"ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன"- அமைச்சர் எ.வ.வேலு தகவல்! 

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

 

erode district road incident high says minister velu


சாலை விபத்துக்களைக் குறைப்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28/09/2022) நடந்தது. இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர். 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "கடந்த ஆட்சிக் காலத்திலேயே சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை என்பது ஆறு வழிச்சாலை என அறிவிப்பு வந்தது. இது குறித்து மத்திய அரசு, மாநில அரசின் கருத்தைக் கேட்டுள்ளது.  தற்போது தமிழக அரசு அடுக்கடுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. எனவே இது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். மேலும் அமைச்சரவை கூடி முடிவெடுக்கும். சென்னை பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த 15 பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்து கேட்புக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடந்தது. இதில் நான், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

நிலத்திற்கு சந்தை மதிப்பீட்டில் 3.5 மடங்கு இழப்பீடு வழங்கப்படும். வீடுகள் கட்டித் தரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பழைய சாலை மீது புதிய சாலை போடும்போது வீடுகள் பள்ளத்தில் சென்று விடுகின்றன. இதைத் தவிர்ப்பதற்காக பழைய சாலையை தோண்டி எடுத்துவிட்டு புதிய சாலைப் போட வேண்டும் என கூறியுள்ளோம். ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன. எனவே முதலமைச்சர் சாலை விபத்தைக் குறைப்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்த கூறினார்.

 

இதில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல அமைப்புகள் கருத்துக்களைக் கூறினார்கள். அவர்களின் கருத்து கவனத்தில் கொள்ளப்படும். ஒவ்வொரு மாதமும் சாலை விபத்துகளை குறைப்பது குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் 63 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை, 42 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலை, 548 கிலோ மீட்டர் மாவட்ட சாலைகள், 1,859 கிலோ மீட்டர் இதர சாலைகள், 172 கிலோ மீட்டர் கரும்பு அபிவிருத்தி சாலை என 3,602 கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன.

 

கடந்த ஆண்டு 160 கிலோமீட்டர் சாலைகள் ரூபாய் 158 கோடி மதிப்பீட்டிலும், நடப்பாண்டு 134 கிலோ மீட்டர் சாலைகள் ரூபாய் 176 கோடி செலவிலும் மேம்படுத்தப்படுகின்றன. தொப்பபூர், மேட்டூர், பவானி தேசிய நெடுஞ்சாலை ரூபாய் 89 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. பவானி புற வழிசாலைக்கு ரூபாய் 85 கோடி மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்க உள்ளன. சத்தியமங்கலம் வனப்பகுதிியில் உள்ள திம்பம் மலைப் பாதையில் 8, 9, 10 வளைவுகள் மற்றும் 4 இடங்களிலும் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்கம் செய்ய விரிவான திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது.

 

அதேபோன்று விபத்து அதிகம் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு 23 இடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சிய பகுதிகளும் மேம்படுத்தப்படும். இதற்கான மொத்த செலவு ரூபாய் 15.26 கோடியாகும். மாவட்டத்தில் 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்டுவது குறித்த விரிவான திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் அம்மாபாளையம் பகுதியில் பாலம் கட்டப்படும். நபார்டு திட்டத்தின் கீழ் 40 பஞ்சாயத்து கிராம சாலைகள் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு, இந்த ஆண்டு மேம்படுத்த ப்படும் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் பாதிப்படைந்த 1.16 லட்சம் மக்களுக்கு ரூபாய் 103 கோடி மதிப்பில்லான மருத்துவ உதவிகள் 678 மருத்துவமனை மூலம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.