Skip to main content

முதலமைச்சரிடம் கோரிக்கைகளை வைத்த தொழில் முனைவோர்கள்! 

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

Entrepreneurs who made demands to the Chief Minister!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று கரூரில் 80 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன்பின் கரூர் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும் உள்ளார்.

 

இதற்காக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் சென்றார். இந்நிலையில் நேற்று மாலை முதலமைச்சரை ஜவுளித் தொழில், கொசுவலை உற்பத்தி, கயிறு உற்பத்தி, வர்த்தகம் மற்றும் உணவு தானியங்கள் உற்பத்தி ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது. 


அங்கு முதலமைச்சரைச் சந்தித்த பல்வேறு தொழில் முனைவோர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின் முதல்வர், தொழில் முனைவோர்களுடன் தொழில்துறை வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் நடத்தினார். 

 

இந்த கலந்துரையாடலின் போது, ‘200 ஏக்கர் பரப்பில் சிப்காட் அமைக்கப்படுவது விரிவாக்கம் செய்யப்பட்டு குறைந்தது 500 ஏக்கர் அளவில் சிப்காட் அமைக்கப்பட வேண்டும். கரூரில் இருந்து அருகிலுள்ள திருச்சி மற்றும் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையங்களை அடைய சிறந்த சாலைகள் இல்லை. இதனால் அதிக அளவில்  நேர விரயமாவதும், விபத்து ஏற்படுவதோடு உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகிறது. எனவே இந்த வழிச்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு, ஆறு அல்லது எட்டு வழி சாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும்.

 

வர்த்தக வழிகாட்டு மையம் கரூர் நகரில் அமைக்க திட்டவரைவு கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கண்காட்சி அரங்கம் மாநாட்டு அரங்கம் தொழில் முனைவோருக்கான வர்த்தகம் மற்றும் சந்தை படுத்துதல் பயிற்சி, சந்தை மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டறிய வழிகாட்டுதல் மையம், ஜவுளி ஆராய்ச்சி மற்றும் புதிய பொருட்களை உருவாக்கும் மையம், கரூர் ஜவுளி தொழில் வரலாற்றை பறைசாற்றும் அருங்காட்சியகம் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக விரைவில் உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முதல்வரிடம் வைக்கப்பட்டது.

 

இக்கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் சரவணன், இந்திய தொழில் கூட்டமைப்பின் கரூர் தலைவர் வெங்கடேசன், கரூர் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி வளர்ச்சி சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன், சிட்கோ தலைவர் பாஸ்கர், கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராம்பிரகாஷ், அசோசியேஷன் ஆப் ஆட்டோபொபைல் கோச் பில்டர் கரூர் தலைவர் முருகானந்தம், கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகத்தின் செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.