Skip to main content

வர்த்தக நிறுவனங்களில் ஊழியர்கள் இனி நிற்கத் தேவையில்லை-பேரவையில் நிறைவேறியது புதிய சட்ட மசோதா!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

hh

 

தமிழகத்தில் ஜவுளி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், கடைகளில் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்திலும் உட்கார முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால், அந்த பணியாளர்கள் கடும் மன உளைச்சல்களுக்கும் அவஸ்தைகளுக்கும் ஆளாகி வருகிறார். இந்த நிலையில், ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், சட்டத் திருத்த மசோதா ஒன்றை, பேரவையில் தாக்கல் செய்தார் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன்.

hh

 

"தமிழகத்திலுள்ள வர்த்தக நிறுவனங்கள், பெரிய பெரிய ஜவுளிக் கடைகள் என பெரும்பாலான கடைகளில் பணிபுரியும் ஆண், பெண் பணியாளர்கள், அவர்களது வேலை நேரம் முழுவதும் நின்றபடியே பணி புரிந்து வருகின்றனர். இதனால், பல்வேறு உடல் நல உபாதைகளுக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட பணியாளர்களின் நிலைமையைக் கருத்தில்கொண்டு கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அனைத்து வேலையாட்களுக்கும் உட்கார இருக்கை வசதி வழங்குதல் அவசியம் என கடந்த 4-ந்தேதி நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பணியாளர்களுக்கு இருக்கை வசதி வழங்கும் சட்டத்திருத்த மசோதா ஒன்றைக் கொண்டு வரலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டது. குழுவில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களால் ஒத்த கருத்துடன் இந்த யோசனை ஏற்கப்பட்டது.

 

தமிழக அரசு மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை அதற்குத் தகுந்தவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது" என்று அந்த சட்ட மசோதாவில்  கூறப்பட்டுள்ளது.  பின்னர் இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

 

தமிழகத்தில் பெரிய ஜவுளி நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும், கடைகளில் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்திலும்கூட , சிறிது நேரம் உட்கார முடிவதில்லை. அதற்கான இருக்கை வசதிகளைச் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தியும் தருவதில்லை.

 

இதனால் கடைகளில் பணிபுரியும் இளம்வயது ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களது பணி நேரம் முழுவதும் நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படுவதன் காரணமாக, பல்வேறு உடல் உபாதைகளையும் சந்தித்து வந்தனர்.  கால் வலியால் அவதிப்படும் சூழலும், அதனால் மன உளைச்சல்களிலும் அவதிப்பட்டனர்.

 

அதனைப் போக்கும் வகையில் , தொழிலாளர்களின் உடல் நலன் மீது அக்கறை கொண்டு, தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளை தடுக்கும் வகையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியிருக்கிறார் அமைச்சர் சி.வி.கணேசன். இந்த சட்ட மசோதா, தொழிலாளர்களிடம் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

இனி வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் உருவாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story

''அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
"We don't want to celebrate it as a festival" - Chief Minister's speech in the meeting

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், ''நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் நினைவகம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரின் நினைவிடம் மட்டுமல்லாது அவரை உருவாக்கிய நம் தாய் தமிழ்நாட்டின் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிற பிப்.26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்காக நான் இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எல்லாம் அடிக்கவில்லை.அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதை நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லா கட்சிகளுடைய உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மூலமாக அழைப்பு விடுத்து இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.