Skip to main content

தேர்தல் நாளில் காவல்துறையினருக்கு ‘அவசர’ உத்தரவு! - வி.எச்.எஃப். செட் ஒப்படைப்பில் வில்லங்கமா?

Published on 05/04/2021 | Edited on 05/04/2021

 

hjk

 

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தலில் இத்தனை அவசரகதியிலா காவல்துறையினர் செயல்படவேண்டும்? வேறுவழியின்றி, , நாளை (6-ஆம் தேதி)  வாக்குப்பதிவு முடிந்ததும், காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டது போல், தங்களுக்கு இட்ட கட்டளையை அரக்கப்பரக்க நிறைவேற்றப் போகின்றனர். 


இதென்ன விவகாரம்? வாக்குப்பதிவு நாளில், வி.எச்.எப். (very high frequency) தொலைத்தொடர்பு உபகரணங்களான வாக்கி-டாக்கி, வாகனங்களின் பொருத்தப்பட்டுள்ள மைக் போன்றவற்றை, பாதுகாப்பு பணிகளுக்காகப் பயன்படுத்துவது வழக்கம். இந்த தொலைத்தொடர்பு சாதனங்கள், ஆந்திரா – ஒருங்கிணைந்த போலீஸ் வயர்லெஸ் இயக்குநரகத்திலிருந்து பெறப்பட்டு, தமிழகத்தில் பல அலகுகளுக்கும் அனுப்பப்பட்டன. இந்நிலையில், ஆந்திர மாநிலத் தேர்தல் ஆணையம், மண்டல் மற்றும் ஜில்லா பரிஷத் பிராந்திய தொகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தலை, ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்துவதாக அறிவிப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநில டி.ஜி.பி., தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன், தொலைத்தொடர்பு சாதனங்களை அதே நல்ல நிலையிலேயே, காலதாமதம் செய்யாமல், உடனே சென்னை PTB சர்வீஸ் பிரிவுக்கு அனுப்பவேண்டும் என்று, தமிழக காவல்துறைக்கு ‘ரேடியோ மெசேஜ்‘ வாயிலாக தகவல் அனுப்பினார். 


தமிழக காவல்துறை ஏடிஜிபியும், அத்தகவலை அப்படியே ஏற்று, விரைந்து செயல்பட வேண்டுமென, தென்மண்டல காவல்துறை அதிகாரிகள் வரைக்கும் ‘ரேடியோ மெசேஜ்’ அனுப்பினார். மத்திய மற்றும் தெற்கு மண்டல ஏடிஎஸ்பி (Tech) ரமேஷ், காவல்துறையினருக்கு வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பிய வாய்ஸ்-மெசேஜில் – “அசெம்பிளி எலக்ஷனுக்காக நாம வாங்கிய சர்வீஸ் செட் எல்லாத்தயும் ஆந்திரா – தெலங்கானாவுக்கு திருப்பிக் கொடுக்கணும். இந்த செட்டை எல்லாம் பக்கத்துலயே கொடுத்து வச்சிக்கங்க. ரொம்ப லாங் டிஸ்டன்ஸ்ல கொடுக்க வேணாம். அப்புறம் கழற்ற முடியாது. போலிங் 7 மணிக்கு முடிஞ்சிருச்சுன்னா.. 8 மணிக்கு கழற்ற ஆரம்பிச்சிருங்க. எஸ்.பி.கிட்ட எமர்ஜெனிஸின்னு காமிச்சிட்டு, நைட்டோட நைட்டா ஆள போட்டு மதுரைக்கு கொண்டு வந்திருங்க. நாங்க வண்டிய வச்சிக்கிட்டு ரெடியா உட்கார்ந்து இருப்போம். எனக்கு ஏழாம் தேதி காலைல 6 மணிக்கு போகணும்னு சொல்லிருக்காங்க. அது உங்க கையிலதான் இருக்கு. நானும் இங்க வண்டி வாங்கி ஆள் போட்டு அனுப்பி விடணும். இத கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கங்க. அதிகபட்ச அட்டென்ஷன் கொடுங்க. இல்லைன்னா.. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பார்த்து நடந்துக்கங்க.” என்று பேசியிருக்கிறார். 


 

hjk

 

இந்த  ‘அவசரம்’ குறித்து நம்மிடம் பேசிய உயர் அதிகாரி ஒருவர் “எல்லாமே சம்பிரதாயமா நடந்துக்கிட்டிருக்கு. 7 மணிக்கு போலிங் முடிஞ்சதும் 8 மணிக்கு வி.எச்.எப். செட்டை அனுப்பனும்னு சொல்லுறாங்க. மாவட்ட / நகர தலைமையகத்துக்கு பக்கத்திலேயே செட்டை பயன்படுத்தணும். நீண்ட தூர ரோந்து மற்றும் மொபைல் பார்ட்டி வாகனங்களுக்கு கொடுக்க வேணாம்னு ஸ்ட்ரிக்டா உத்தரவு போட்டிருக்காங்க. ஒரு ஊருல இருக்கிற வாக்குச்சாவடிக்கும், இன்னொரு ஊருல இருக்கிற கவுண்டிங் சென்டருக்கும் இடைப்பட்ட தூரம் நெறய இருக்கும். காவல்துறை டிஜிபி சொல்லுறத அப்படியே கடைப்பிடித்தால், கவுண்டிங் சென்டர் வரைக்கும் வி.எச்.எப். சாதனங்களைக் கொண்டுசெல்ல முடியாது. வாக்குப்பதிவு நடந்த இடத்திலேயே செட்டை அகற்றனும்கிற மாதிரி இருக்கு இந்த உத்தரவு. நடக்கக்கூடாத ஏதாச்சும் ஒண்ணு நடந்தாக்கூட, வெளிப்படையா வி.எச்.எப். மூலம் தகவல் பறிமாறிக்கொள்ள முடியாது. கொடுத்தது கொடுத்தபடியே நல்ல நிலையில் வி.எச்.எப். செட் இருக்கணும்னு கண்டிஷன் வேற. அப்படின்னா.. செட்ட யூஸ் பண்ணாம அப்படியே திருப்பிக் கொடுத்திருங்கன்னு ஒரு அர்த்தம் இருக்கு. சும்மாவே, இவிஎம் மெஷின் குறித்து மக்களுக்கு சந்தேகம் இருக்கு. இந்த மாதிரி நடக்கும்போது, போலீஸை வச்சே ஓட்டு மெஷினை மாற்ற திட்டம் எதுவும் இருக்கோன்னு, மக்கள் பேசுறதுக்கான வாய்ப்பை ஏற்படுத்திட்டாங்க.” என்றார் வேதனையுடன்.

 

திட்டமிடல் இல்லாமல் இத்தனை பலவீனமாகவா இருக்கிறது தேர்தல் ஆணையம்? 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.