Skip to main content

மக்னா யானை சுட்டுக்கொலை; வேட்டை கும்பல் கைது! துப்பாக்கிகள் பறிமுதல்!

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

elephant incident forest officers in dharmapuri

 

பென்னாகரம் அருகே, மக்னா யானையை சுட்டுக்கொன்ற வேட்டை கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 நாட்டுத்துப்பாக்கிகள், ஈயக்குண்டுகள், கரி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

 

தர்மபுரி வனக்கோட்டம் பென்னாகரம் வனச்சரகம் பேவனூர் காப்புக்காடு ஆஞ்சநேயர் கோயில் ஓடை அருகே மக்னா யானை ஒன்று, ஜூலை 1- ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. 

 

தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல்லநாயுடு, நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினார். ஓசூர் கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், யானையின் சடலத்தைக் கூராய்வு செய்தார். அப்போது, யானையின் நெற்றி பகுதியில் ஈயக்குண்டு ஒன்று பாய்ந்திருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்கள் யானையை சுட்டுக் கொன்றிருப்பது தெரிய வநத்து. 

 

இதுகுறித்து வன உயிரினக் குற்ற வழக்கு பதிவு செய்து, வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பென்னாகரம் மூங்கில்மடுவு பகுதியைச் சேர்ந்த சின்னப்பநல்லூர் சண்முகம் (வயது 37), கொட்டத்தண்டுகாடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (வயது 42) சின்னப்பநல்லூரைச் சேர்ந்த கமலேசன் (வயது 44), சிட்டான்கொட்டாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 27) ஆகியோர்தான் யானையை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பது தெரிய வந்தது. 

 

பிடிபட்ட நான்கு பேரும் வனப்பகுதியில் தடையை மீறி அடிக்கடி பன்றி, மான்களை வேட்டையாடி வந்துள்ளனர். சம்பவத்தன்று அவர்கள் மான் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, மக்னா யானை துரத்தியுள்ளது. 

 

அதனிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் நாட்டுப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து 4 நாட்டுத்துப்பாக்கிகள், ஈயக்குண்டுகள், கரி மருந்து ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

 

விசாரணைக்குப் பிறகு அவர்கள் நான்கு பேரையும் தர்மபுரி கிளைச்சிறையில் அடைத்தனர். இது ஒருபுறம் இருக்க, பிடிபட்ட கும்பல் அடிக்கடி வனப்பகுதிக்குள் புகுந்து உயிரினங்களை வேட்டையாடி வந்துள்ளனர். வனத்துறையினரின் அலட்சியத்தால்தான் அவர்கள் தொடர்ந்து அத்துமீறி நுழைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வனக்கோட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்கும்படியும் வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.