Skip to main content

யானை தாக்கியதில் 5 வயது சிறுமி உயிரிழப்பு - பீதியில் கண்ணன் குழி எஸ்டேட்

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

elephant attack - Kannan Kuzhi Estate in panic!

 

தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள வால்பாறையின் கண்ணன் குழி எஸ்டேட் பகுதியில் புகுந்த காட்டு யானை ஒன்று அப்பகுதி மக்களைப் பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் காட்டு யானை தாக்கியதில் 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் மேலும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

அதிரப்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள கேரள மாநிலத்தில் கண்ணன் குழி எஸ்டேட்டில் சமீப காலமாகவே காட்டுயானை ஒன்று சுற்றிவருகிறது. இந்நிலையில் அப்பா மற்றும் தாத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் 5 சிறுமி சென்று கொண்டிருந்த பொழுது காட்டுயானை வருவதைக் கண்டு அலறியடித்து மூவரும் தப்பிக்க முயன்றனர். ஆனால் சிறுமி காட்டுயானையிடம் சிக்கிக்கொண்டார். காட்டுயானை மிதித்து அக்னிமியா என்ற அந்த ஐந்து வயதுச் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

சிறுமியைக் காப்பாற்ற முயன்ற சிறுமியின் தந்தை மற்றும் அவரது தாத்தா ஆகியோர் படுகாயமுற்றனர். இவர்களின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் யானையை அந்த பகுதியிலிருந்து விரட்டி சிறுமியின் சடலத்தை மீட்டனர். சம்பந்தப்பட்ட காட்டுயானையை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தேடி அலையும் யானை கூட்டம்-வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Herd of elephants wandering in search of water - forest department warns motorists

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உட்பட  ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  இதில் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கிராமத்துக்குள் புகுவதும் விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சாலை வரும் வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பதுமாக அலைந்து வருகிறது.  

இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் உணவு-தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. யானை கூட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீரை தேடி யானைகள் கூட்டம் அடிக்கடி சாலையோரம் வருகிறது. வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறது. எனவே வாகன ஓட்டிகள் இந்தப் பகுதியைக் கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம். அதைப்போல் யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.