Skip to main content

பதவிக்கு முட்டி மோதிய ஒரே கட்சியை சேர்ந்த இருவர்... பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து முடிந்த தேர்தல்!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

The election ended with heavy police security

 

மரக்காணம் ஒன்றியத்தில் இருபத்தாறு ஒன்றிய கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் 17 திமுக உறுப்பினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்று, அதிமுக மூன்று, பாமக 2, சுயேச்சை மூன்று என களம் கண்டனர். இதில் 14 கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தால் சேர்மனாக முடியும் என்ற நிலையில், திமுக 16 கவுன்சிலர்களைக் கொண்டு பலமாக இருந்தது. இந்நிலையில், மாவட்டச் செயலாளரும் மந்திரியுமான செஞ்சி மஸ்தானின் ஆதரவாளர் தயாளன் சேர்மனாக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. திமுகவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தனக்கும் கவுன்சிலர்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி போட்டியில் குதித்தார்.

 

ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் இருவரும் சேர்மன் பதவிக்கு முட்டி மோதியதால் கடந்தமுறை சேர்மனை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடைபெற முடியாமல் தள்ளிவைக்கப்பட்டது. இதன் காரணமாக கண்ணன் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறி கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 22ஆம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, 22ஆம் தேதி அன்று மரக்காணம் ஒன்றிய சேர்மன் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

 

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக தயாளன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து கடைசிநேர விருப்ப மனு தாக்கல் செய்தார் கண்ணனின் ஆதரவாளர் அர்ஜுனன். இதையடுத்து தேர்தல் நடைபெற்றது. இருபத்தாறு கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். இதில் தயாளன் 14 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அர்ச்சுனன் 12 வாக்குகளும் பெற்றனர். இதனால் தயாளன் சேர்மனாக வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து போட்டியின்றி ஒருமனதாக துணை சேர்மனாக பழனி என்பவரை தேர்வு செய்தனர். இதில் வெற்றிபெற்ற சேர்மன் தயாளன், துணைச் சேர்மன் பழனி ஆகியோருக்கு அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

 

இதற்கிடையே தேர்தல் நடத்தும் அலுவலர்களைக் கண்டித்து அர்ச்சுனன் ஆதரவாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனிடையே, மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்று நியாயம் கேட்போம் என்று தோல்வியடைந்த அர்ஜுனன் ஆதரவாளர்கள் கூறிவிட்டு கலைந்து சென்றுள்ளனர். மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மரக்காணம் ஒன்றிய சேர்மன் தேர்தல் ஒருவழியாக நடத்தி முடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடம் ஒருவித அமைதியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.