Skip to main content

பெற்றோரின்றி படுத்த படுக்கையாய் கிடக்கும் சிறுவன்; வேதனையோடு தூக்கி சுமக்கும் மூதாட்டிகள் - உதவிக்கரம் நீட்டுமா அரசு?

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

Elderly women who are left with handicap grandson without electricity

 

தாய், தந்தை யாருமில்லை, மின்சாரம் இல்லை, ஆதார் இல்லை, அடையாள அட்டைகள் ஏதும் இல்லை அதனால் உதவித் தொகையும் இல்லை. கடும் வெயிலின் அனல் காற்றுக்கு கொதிக்கும் சூட்டில் அசைவற்றுக் கிடக்கும் மாற்றுத் திறனாளி சிறுவனை 2 மூதாட்டிகளே கவனித்து தூக்கிச் சுமக்கிறார்கள். அரசாங்கமும், அதிகாரிகளும் சற்று மனமிறங்கினால் மின்சாரமும், உதவித் தொகையும் கிடைக்கும். 

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடக்கு சரபோஜி தெருவைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - சந்தரம்பாள் தம்பதி இவர்களின் ஒரு மகள் மாற்றுத்திறனாளி. கடந்த 2011 ஜூலை 23 ந் தேதி பிறந்த ஆண்  குழந்தைக்கு மணிகண்டன் என பெயர் வைத்தனர். சில வருடங்களில் மணிகண்டன் உடல்நிலையில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டு அசைவற்றுப் படுத்த படுக்கையில் கிடக்கும் மாற்றுத்திறனாளி ஆகிவிட்டான். மாற்றுத்திறனாளி பெண்ணின் தந்தை செல்வராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட அடுத்த சில ஆண்டுகளில்  மாற்றுத்திறனாளி மகளும் மடிந்தார். நடக்க முடியாத படுத்த படுக்கையாக கிடக்கும் தனது பேரனை பராமரித்து தூக்கிச் சுமக்கும் பணியை முழுமையாக ஏற்றார் சுந்தரம்பாள். சுந்தரம்பாளுக்கு துணையாக அவரது சகோதரியும் கூடவே வந்துவிட்டார்.

 

பர்மா காலனியில் ஒரு வீட்டில் தங்கி இருக்கும் மூதாட்டிகள் அசைவற்றுக் கிடக்கும் மாற்றுத் திறனாளி சிறுவனை பராமரித்துக் கொள்ள ஒரு மூதாட்டி வீட்டில் இருக்க மற்றொரு மூதாட்டியான சுந்தரம்பாள் கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் சொர்ப்ப வருமானத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனுடன் வாழ்ந்து வருகின்றனர். கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மின்சாரம் இல்லாத வீட்டிற்குள் கிடக்க முடியாமல் வெக்கையில் தவிக்கும் சிறுவனுக்கு இரு மூதாட்டிகளும் மாற்றி மாற்றி விசிறிக் கொண்டே இருக்கிறார்கள். மின் இணைப்பு பெற்றுத் தருவதாக சிலர் அந்த மூதாட்டிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு மின் இணைப்பு பெற்றுத் தரவில்லை.

 

மற்றொரு பக்கம் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாதாந்திர உதவித் தொகை வருகிறதா என்றால்... “அதுக்கு யாரு தம்பி வாங்கித் தருவாங்க. அந்த மணிகண்டன் பயலுக்கு பிறந்த சர்டிபிகேட் மட்டும் தான் இருக்கு ஆதார் இல்லை. ஆதார் எடுக்க அப்பா, அம்மா கைரேகை வேணுமாம் அவங்க யாரும் இல்லாதப்ப எப்படி ஆதார் எடுக்கிறது. ஆதார் இருந்தா தான் மாற்றுத்திறனாளி சான்று கிடைக்குமாம் அந்த சான்று இருந்தா தான் உதவித் தொகை கொடுப்பாங்களாம் நாங்க யாருகிட்ட போய் இதெல்லாம் வாங்குறது. அதனால் தள்ளாத வயசுல கூலி வேலைக்கு போவேன் எங்க அக்கா மணிகண்டனை பார்த்துக்கும் வீட்ல இருக்கும். நாங்க இருக்கிற வரைக்கும் அவனை பாதுகாப்போம்.

 

இப்ப வெயில் ரொம்ப இருக்கா வீட்டுக்குள்ள கிடக்க முடியாத தவியா தவிக்கிறான் கரண்ட் இருந்தா ஒரு காத்தாடியாவது வாங்கி வைக்கலாம் அதுக்கும் வழியில்ல. அதனால அவன் கஸ்டப்படுறதை பார்கவே வேதனையா இருக்கும் அதனால விசிறிக்கிட்டே இருக்குறோம். அரசாங்கம், அதிகாரிகள் மனசு வச்சால் மணிகண்டனுக்காக கரன்ட் கொடுத்துட்டு ஆதார் எடுத்து மாற்றுத்திறனாளி சான்று கொடுத்து உதவித் தொகை கிடைக்கச் செய்தால் புண்ணியமா போகும். அவங்க குடும்பங்களும் நல்லா இருக்கும். வெளியூர்களுக்கு போய் இந்த சான்று வாங்கா அவனை தூக்கி போக எங்க உடம்புல சக்திமும் இல்ல  கார்ல போக பணமும் இல்லை. அதனால அப்படியே போட்டு வச்சுட்டு இருக்கிறோம்” என்றார் சுந்தரம்பாள் பாட்டி கண்ணீரோடு. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இந்த மாற்றுத்திறனாளி சிறுவனும் அவனுக்காக 2 மூதாட்டிகளும் படும் வேதனையை நினைத்து சிறப்பு நடவடிக்கை எடுத்தால் நல்லது. அதிகாரிகள் மனது வைப்பார்கள் என்று நம்புவோம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.