Skip to main content

இ.ஐ.ஏ. குறித்து ஆராய குழு... 2021 அரியணை யாருக்கு என்பதை மக்களே முடிவு செய்வார்கள்... -முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
EIA committee to decide ... 2021 The people will decide who will get the throne - Chief Minister Edappadi Palanisamy

 

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த இரு தினங்களாக கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வினை திண்டுக்கல், மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்டு வருகிறார். நேற்று திண்டுக்கல்லிலும், மதுரையிலும் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று நெல்லையில் கரோனா  தடுப்பு பணிகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

 

இ-பாஸ் பெறுவதற்கான நடைமுறையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இ-பாஸ் பெறுவதற்கான முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்றார். அதேபோல் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு  அளிக்கும் அறிக்கையின்படியே முடிவெடுக்கப்படும் என தெரிவித்த முதல்வர், இ.ஐ.ஏ. எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு அமைத்த குழு தரும் அறிக்கை அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்த விவகாரத்தில் அரசு முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

 

முன்னாள் தி.மு.க தலைவர் கலைஞரின் இரண்டாவது நினைவு தினமான இன்று திமுக தலைவர் ஸ்டாலின் 2021-ல் தமிழகத்தில் ஆறாவது முறையாக தி.மு.க அரியணை  ஏறும் என சூளுரைத்திருந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு,

2021ல் யாரை அரியணை யாருக்கு என்பதை மக்களே முடிவு செய்வார்கள். தமிழகத்தில் எந்த கட்சியை அரியணையில் ஏற்றுவது என தமிழக மக்களே முடிவு செய்வார்கள் என்றார்.

 

செய்தியாளர் சந்திப்பின் இறுதியில், தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்படும். அதேபோல் அவசரகால மருத்துவ பணியாளர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.