Skip to main content

பகலில் ஈரோட்டில் கூட்டம்... இரவில் பண்ணைவீட்டில் ரிலாக்ஸ்...! - எடப்பாடியின் பிரச்சாரப் பயணம்!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

edappadi pazhaniswamy  election campaign at erode

 

'அதிமுகவை நிராகரிப்போம்' என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்கள்சபைக் கூட்டம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு போட்டியாக, அ.தி.மு.க. சார்பில் 'வெற்றி நடைபோடும் தமிழகமே' என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வருகிறார்.

 

தனது சொந்தப் பகுதியான (கொங்கு மண்டலத்தில்) சேலம், நாமக்கல்லில் சென்ற வாரம் சுற்றுப்பயணம் செய்த எடப்பாடி, மீண்டும் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக 6, 7-ந் தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்துவருகிறார். 6-ந் தேதி காலை பவானி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடியை பவானி லட்சுமி நகரில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி, கலெக்டர் கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், தோப்பு வெங்கடாச்சலம், தென்னரசு, சிவசுப்ரமணி, ராஜகிருஷ்ணன், ஈஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

 

பிறகு பவானியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கினார்.

 

"இந்த பவானி பொதுக்கூட்டத்தில் நான் பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். நான் படித்து வளர்ந்தது பவானி தொகுதியில் தான். வேளாண் மக்கள் நிறைந்த தொகுதியான இங்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செ்யப்பட்டுவருகிறது. தண்ணீர் சேமிப்பை அதிகப்படுத்த குடிமராமத்துப் பணிகள் மூலம் ஏரிகள் அனைத்தும் நிறைக்கப்பட்டுள்ளது. தூர்வாராமல் இருந்த நீர் நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது. மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் மூலம் தண்ணீர் வீணாவதைத் தடுக்க காங்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கீழ்பவானி கால்வாயில் கசிவு ஏற்படுவதைத் தடுக்க 640 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


'மக்கள் சபை' என்ற பெயரில் கூட்டம் நடத்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு என்ன நன்மை செய்தார்? நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இதேபோல கூட்டம் நடத்தி மனுக்கள் வாங்கினர். அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள். மக்கள் கொடுத்த மனுக்களை எங்களிடம் ஒப்படைக்கவே இல்லை. பொய்ப் பிரச்சாரம் மட்டுமே ஸ்டாலின் மேற்கொள்கிறார். கவர்னரிடம் மனு கொடுத்ததாகக் கூறுகிறார். அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவிக்கிறார். நடக்காத டெண்டரில் ஊழல் செய்ததாகக் கூறுகிறார். வேண்டுமென்று திட்டமிட்டு முதல்வரான என் மீதும், அமைச்சர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறார். மக்களிடம் கவர்ச்சிகரமாகப் பேசி தவறான தகவல்களைப் பரப்புகிறார். முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, துரைமுருகன், பொன்முடி, பெரியகருப்பன், அனிதாராதாகிருஷ்ணன்  உள்ளிட்ட பலர் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்குமாறு உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. அதிமுக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஸ்டாலின் கூறி வருகிறார். டெண்டர் ஆன்லைன் மூலமே தற்போது நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் பெட்டிவைத்து டெண்டர் போடும் முறையே இருந்தது. அதில் யாருக்கு கொடுக்கவேண்டுமோ அவர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. மக்களைக் குழப்பி அதில் அரசியல் செய்கிறார் ஸ்டாலின். அவரது கனவு எப்போதும் பலிக்காது. கானல் நீராகவே இருக்கும். 2-ஜி ஏலத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது. அந்தப் பணத்தில் 200 கோடி ரூபாய் கலைஞர் டிவிக்கு கைமாறியது. ஸடாலின் அதில் பங்குதாரராக இருக்கிறார். இதனை மறைக்க அதிமுக மீது திட்டமிட்டு அரசியல் நாடகத்தை நடத்தி பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்.

 

edappadi pazhaniswamy  election campaign at erode

 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைத்ததை எனது அரசு செய்துவருகிறது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக 2,000 அம்மா மினி கிளினிக்கை எனது அரசு அமைத்துள்ளது. தமிழக அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் அதில் ஸ்டாலின் குறைகூறி வருகிறார். இதை மட்டுமே அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி படிக்க 7.5% உள் இடஒதுக்கீடு செய்துகொடுத்து, 318 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். பவானியில் உள்ள அரசுப் பள்ளியில் நான் படித்தவன். அதன் காரணமாக ஏழை மாணவர்களின் நிலை எனக்குத் தெரியும். 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்து 90%பேருக்கு எனது அரசு வழங்கியுள்ளது.
 

தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் கூறுகிறார். நல்ல ஆட்சி கொடுத்ததால்தான் பல்வேறு விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. கல்வி, உறுப்புமாற்று அறுவைசிகிச்சை, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைகளுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. திமுக கவர்ச்சிகரமான திட்டங்களை மட்டுமே அறிவிக்கும். திமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு நிலம் வழங்குவதாகக் கூறினர். ஆனால் வழங்கவில்லை. குடும்ப அரசியல் மட்டுமே திமுகவில் நடைபெறுகிறது. ஸ்டாலின் தொடங்கி உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

 

cnc

 

மக்களை ஏமாற்றி திமுக சொத்து சேர்த்துள்ளது. ஆட்சி அமைத்து மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள். உங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் செய்வதில்லை. அதிமுக ஆட்சி மட்டுமே மக்களுக்கான ஆட்சி. மக்களே நீதிபதிகள். மக்களுக்குத் தேவையான அனைத்தும் எங்கள் அரசே செய்துதரும். ஈரோடு மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. அது வரும் தேர்தலிலும் நிச்சயம் நடக்கும். நமது அரசு மீண்டும் அமையும்" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 

பவானியைத் தொடர்ந்து அந்தியூர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் என மாவட்டத்தின் ஒரு பகுதியைப் பிரச்சாரப் பயணமாகச் சுற்றிவந்த முதல்வர் எடப்பாடி, இரவு அவரின் (எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் தோட்டத்தில் உள்ள) பண்ணை வீட்டில் தங்கிவிட்டு 7-ந் தேதி மீண்டும் ஈரோடு மாவட்டத்தில் பயணம் செய்து, அன்று இரவு மீண்டும் தனது பண்ணை வீட்டிலேயே ஓய்வெடுக்கிறாராம். எடப்பாடி எப்போதும் தனது தோட்டத்துப் பண்ணை வீட்டுக்கு வந்தாலே அவரது நட்பு வட்டம், உறவு கூட்டம் இரவில் கதை பேசி உற்சாகமாக இருக்குமாம்...!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.