Skip to main content

எனது ஊரின் பெயரில் தனி மாவட்டமா..? -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

 erode

 

பல்வேறு திட்டப் பனிகள் தொடக்க விழா, நல திட்ட உதவிகள் வழங்குதல் என அரசு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை ஈரோட்டுக்கு வருகை தந்தார்.

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோலியக் குழாய் அமைக்கும் திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. விவசாயிகளின் அனுமதியுடன்தான் திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த காலங்களில் நிலம் எடுப்புக்கு நிலத்தின் மதிப்பில் 10 சதவீதம் தான் வழங்கப்பட்டது. இப்போது 100 சதவீத இழப்பீடு வழங்கப்படுகிறது.

 

கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கையெடுக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கையெடுக்கப்படும்.    

 

மின் கட்டணத்தில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதனைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 21 ஆம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்.  மின் கட்டண கணக்கீட்டில் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை. கரோனா காரணமாக மின் கட்டணத்தை வீடு வீடாகச் சென்று கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டது. 4 மாதங்களுக்கான மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, இரண்டாகப் பிரித்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு மேல் என்ன சந்தேகம் என்பது தெரியவில்லை. வேண்டுமென்றே ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக, இதைச்சொல்லி போராட்டம் நடத்தப்போவதாகக் கூறியுள்ளார்.

 

சாயக்கழிவு பிரச்சனை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதில் உண்மை இல்லை. இது தவறான தகவல். 147 சாய ஆலைகள் உள்ளன. இதில் 41 சாய ஆலைகள் தனித்தனியே தங்கள் வளாகத்தில், பூஜ்ய கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி செயல்படுத்தி வருகின்றன. அரசு கவனமாக பார்த்துக்கொண்டிருக்கிறது. வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரித்துதான் விட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை அரசு கண்காணித்து வருகிறது. எங்காவது தவறு நடப்பதாக அரசு கவனத்துக்கொண்டு வந்தால் நடவடிக்கையெடுக்கப்படும்.    

 

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் உயிரிழந்தால் அரசு ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும் என அரசின் அறிவிப்பு குறித்த விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவத் துறையில் பணியாற்றி வருபவர்கள் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தால் ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும் என்றும், பிற துறைகளைச் சார்ந்தவர்கள் உயிரிழந்தால் ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும் எனவும், அவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் பட்டியலை மொத்தமாக தயாரித்து அரசு வெளியிடும். அதன்பிறகு நிவாரணம், வாரிசுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

 

மஞ்சள் விளைச்சலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து செயல்படுத்த ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.30 கோடி செலவில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது.    


            
உலக அளவில் 210 நாடுகளில் கரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக கரோனா பரிசோதனை செய்த ஒரே மாநிலம் தமிழகம் தான். நோய்ப் பரவலைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் நோய்ப் பரவலைக் குறைத்து இயல்பு நிலைக்குக் கொண்டுவரலாம்.


தொழிற்சாலைகளில் 100 சதவீதம் அளவுக்கு பணியாளர்களை வேலைக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு  கடன் வசதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதன்படி ஈரோடு மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.350 கோடி கடன் அளிக்க அரசு நடவடிக்கையெடுத்துள்ளது.

 

http://onelink.to/nknapp

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, அந்தியூர் வட்டங்களைப் பிரித்து எடப்பாடி மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளதாக வெளியாகி வரும் தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி, இது தவறான தகவல், இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படமாட்டாது என்றார்.  

 

ஞாயிற்றுக்கிழமை போல் பொது முடக்கம் நீடிக்கப்படுமா? என்ற கேள்விக்கு தற்போது வரை அதுபோன்று எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.