Skip to main content

’நா கூசாமல் கேட்கிறீர்களே, பட்டியல் போதுமா? இன்னும் வேண்டுமா?’-எடப்பாடி பழனிச்சாமிக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’’காஷ்மீர் மாநில உரிமை பறிப்பைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர்  ப. சிதம்பரம் ஆற்றிய உரைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரிய பதிலைக் கூறாமல் பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து 10 நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்து வரலாறு படைத்த பொருளாதார சீர்திருத்த செம்மலைப் பார்த்து, ‘இவர் பூமிக்கு பாரமாக இருக்கிறார், நாட்டிற்கு இவரால் என்ன பயன் ? இவர் கொண்டு வந்த புதிய திட்டம் என்ன ?” என்று காழ்ப்புணர்ச்சியுடன் கடுமையாக பேசியிருக்கிறார். 

 

c

 

1984 இல் நாடாளுமன்ற உறுப்பினராக நுழைந்த ப. சிதம்பரம்  மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சராகவும், பிறகு,1991 இல் மத்திய வர்த்தகத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். புதிய பொருளதாரக் கொள்கை அமலுக்கு வந்த போது, அதை நிறைவேற்றுகிற வகையில் வர்த்தகத் துறையில் புரட்சிகரமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையில் பல சீர்திருத்தங்களை நிறைவேற்றினார். 

 

1996 இல் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்த போது, கனவு பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்.   இவரோடு இணைந்து பணியாற்றியவர்களில் அவரது செயல் திறனை பாராட்டாதவர்களே இல்லை. புதிய சிந்தனைகளை ஏற்றுக் கொள்ள தயங்காதவர். கூர்மையான சிந்தனை கொண்ட சீர்திருத்த மேதை என்று அவரை பல பொருளாதார அறிஞர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

 

நிதிநிலை அறிக்கை என்பது இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையை தகர்த்த அன்றைய நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைத் தொடர்ந்து, அதே பாதையில் தமது தனி முத்திரையை பதித்தவர். 2004 ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த போது நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அக்கால கட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை முதற்கட்டமாக 150 மாவட்டங்களில் அறிமுகம் செய்தார். பிறகு, படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரத்தின் அடிப்படைத் தன்மையை மாற்றியமைத்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சென்வாட் வரியை ரத்து செய்து கைத்தறி நெசவாளர்களின் துயரத்தை நீக்கினார். சென்னை மாநகர மக்களின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி செயல்படுத்தினார். 

 

2008 ஆம் ஆண்டு 4 கோடி விவசாயிகளின் கடன் சுமையை போக்குவதற்காக ரூ.65 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார். அதனால் பயனடைந்தவர்களின் பட்டியலை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அறிவிப்பு பலகையில் வெளியிடச் செய்தவரும் இவரே. இவர் நிதியமைச்சராக இருந்த போது தான் சமூக சேவை திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பல மடங்காக அதிகரித்தது. 

 

 ப. சிதம்பரம்  தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் வரி விதிப்புகள் கூட இடம் பெறாமல் இருக்கலாம். ஆனால், திருக்குறள் இடம் பெறாமல் இருக்கவே இருக்காது. இதன்மூலம் தமிழுக்கு பெருமை சேர்த்த முதல் வேட்டி கட்டிய தமிழரும் இவரே. அனைத்து வரிகள் மீதும் கல்விக்காக 2 சதவீதம் கூடுதல் வரி விதித்து வருமானத்தை பெருக்கியவர்.

 

மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதை உணர்ந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக் கடன் திட்டத்தை அறிவித்தவர். இதன் பயனாக  24 லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 56 ஆயிரம் கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் பொறியாளர்களாகவோ, மருத்துவராகவோ ஏழை, எளியவர்கள் படிக்க முடிந்தது என்று சொன்னால், அது ப. சிதம்பரம் வழங்கிய கல்விக் கடன் தான் காரணமாகும். இதில் இந்தியாவிலேயே அதிகளவில் பயன் அடைந்ததில் ஐந்தில் ஒரு பங்கு மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் வழங்குவதற்காக 2003-04 இல் பா.ஜ.க. ஆட்சியில் ரூபாய் 87 ஆயிரம் கோடியாக இருந்ததை 2014 இல் ரூபாய் 10 லட்சம் கோடியாக உயர்த்தியர். இதற்கான வட்டி விகிதத்தை 7 சதவிகிதமாகவும், தவணை தவறாமல் கட்டுபவர்களுக்கு 4 சதவிகிதமாகவும் குறைத்தார். இதனால், விவசாயிகள் பெருமளவில் பயன் அடைந்தனர். 

 

பெருந்தலைவர் காமராஜரின் கனவு திட்டமான மதிய உணவு திட்டத்தை அகில இந்திய அளவில் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியவர். இதனால் நாடு முழுவதும் உள்ள 12.12 லட்சம் ஆரம்ப பள்ளிகளில் 10 கோடிக்கும் மேலான குழந்தைகளுக்கு சூடான மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்காக 2013 இல் ரூபாய் 11 ஆயிரத்து 937 கோடி நிதியை ஒதுக்கினார். மேலும், அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், ராஜீவ்காந்தி பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம், நலிந்த பிரிவினருக்கான திட்டம், தொழிலாளர் நலன் திட்டம், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறுமலர்ச்சி இயக்கம், ராஜீவ் வீட்டுவசதி திட்டம், பின்தங்கிய பகுதிகளுக்கான மானிய ஒதுக்கீடு, புதிய ஜவுளிக் கொள்கை, நெடுஞ்சாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு திட்டம், சிறுபான்மை மக்களின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, பிரதமர் கிராம சாலைகள் திட்டம், தகவல் தொழில்நுட்பத் திட்டங்கள், தொலைத் தொடர்பு துறையில் இமாலய வளர்ச்சி, பாரத் நிர்மான் திட்டம், ராஜீவ்காந்தி ஊரக மின்மயமாக்கல் திட்டம், இப்படி சாதனை திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 

 

முதலமைச்சர் எடப்பாடி அவர்களே, ப. சிதம்பரம் பதவியிலிருந்த போது நிறைவேற்றிய திட்டங்கள் என்ன என்று நா கூசாமல் கேட்கிறீர்களே, நிறைவேற்றிய திட்டங்களின் பட்டியல் போதுமா ? இன்னும் வேண்டுமா ? நிதியமைச்சராக இருந்து சாதித்த சாதனைகளை மறைக்கும் வகையில் பேசுவதன் மூலம் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா ? 

 

2004-05 இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 54 லட்சத்து 80 ஆயிரத்து 380 கோடி. ஆனால் 2014 இல் ஆட்சியை விட்டு விலகுகிற போது மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 1 கோடியே 5 லட்சத்து 27 ஆயிரத்து 674 கோடியாக இரு மடங்காக உயர்ந்தது. இதன்மூலம் இந்தியா வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டது.

 

சுதந்திர இந்தியாவில் வரலாறு காணாத சாதனைகளை நிகழ்த்தி, 2004 முதல் 2009 வரை தொடர்ந்து மூன்றாண்டுகள் நமது நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 9 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்தியதில்  ப. சிதம்பரம் அவர்களின் பங்கை பாராட்டாமல் எவரும் இருக்க முடியாது. இத்தகைய சாதனைகளை நிகழ்த்தியவரை இந்தியாவின் சாதனைச் செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப. சிதம்பரம் அவர்களை, விபத்தின் மூலம் முதலமைச்சராக பதவிக்கு வந்த எடப்பாடி அவர்களே, உங்களுக்கு பாராட்ட மனம் இல்லை என்றாலும், சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே.

 

ப. சிதம்பரம் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை எப்படிப் பெற்றார் என்பதை வரலாறு அறியும். தனது திறமையான அணுகுமுறையின் காரணமாகவே, அவரை நோக்கி பதவிகளும், பொறுப்புகளும் வந்தன. என்றைக்கும் இவர் பதவிகளை தேடிப் போனதே இல்லை. பதவிகள் தான் இவரை தேடி வந்திருக்கின்றன. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எடப்பாடி அவர்களே, கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.