Skip to main content

வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்! குறுஞ்செய்தியை நம்பி லட்சத்தை இழந்த இளைஞர்! 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

Earn from home! Youth who lost lakhs relying on SMS!

 

விழுப்புரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 30.06.2022 அன்று விழுப்புரம் சாலமேடு பகுதியைச் சேர்ந்த பிரபா அரவிந்தன்(20) என்பவர், புகார் ஒன்று கொடுத்தார். 

 

அந்தப் புகாரில், 28.06.2022 அன்று அவரது கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த செய்தியை வீட்டில் இருந்தபடியே வேலை செய்து ஒரு நாளைக்கு 7000 வீதம் பணம் சம்பாதிக்கலாம் அதற்கான ஆலோசனை வழங்குவதாக இருந்துள்ளது. இதை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதற்காக முன் பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் கூறும் வங்கி கணக்கில் அனுப்புமாறு அரவிந்தனிடம் கூறியுள்ளனர். 

 

அதன்படி அந்த மர்ம மனிதர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக அரவிந்தன் தனது வங்கிக் கணக்கில் இருந்தும், ஜி-பே மூலமாக மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் எந்த விவரமும் தெரியாததால், குறுஞ்செய்தி அனுப்பிய நபரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அந்த நபர் பதில் அளிக்காமல் இருந்துள்ளார். அப்போதுதான் அரவிந்தன் தான் ஏமாறியது தெரியவந்தது. 

 

அதனைத் தொடர்ந்து அவர், உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரை பெற்ற சைபர் கிரைம் காவல்துறையினர் அந்த மர்ம நபரின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். அதன்பிறகு அந்த வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட அந்தப் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் பிரபா அரவிந்தனிடம் இன்று ஒப்படைத்துள்ளனர். 


இப்புகாரின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் ரவிசங்கர், முகமது அசாருதீன் மற்றும் ராஜசேகர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பாராட்டுகளை தெரிவித்தார். அதேபோல், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கும் தனது பாராட்டைத் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.