Durai Vaiko request DAP for farmers Provide Manure through Cooperative Societies

விவசாயிகளுக்கு டி.ஏ.பி. அடி உரம் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கிட வழி செய்ய வேண்டும் எனத் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாகப் பருவமழை பெய்துள்ளதால், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பாசிப் பயிர் உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு உள்ளார்கள். அதற்கு அடி உரமாக டி.ஏ.பி. தேவைப்படுகிறது. விவசாயிகள் தனியார் கடைகளில் டி.ஏ.பி. உரம் வாங்கச் சென்றால், அதனுடன் வேறு ஏதாவது உரத்தையும் சேர்த்து வாங்கச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து கடைகளில் விவசாயிகள் முறையிட்டபோது, எங்களுக்கு உரம் வழங்கும் நிறுவனங்கள், ஒரு உரத்தை வாங்கும்போது மற்றொரு உரத்தையும் சேர்த்துத்தான் விற்க வேண்டும் என்று எங்களிடம் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இப்படி விற்க வேண்டிய நிலை இருக்கிறது என்கிறார்கள். விவசாயிகளின் இப்புகார் குறித்து தூத்துக்குடி மாவட்ட விவசாய இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்கள்.

Advertisment

இது போன்ற நிலை தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு பயிர்களின் அடி உரமான டி.ஏ.பி. தமிழக அரசின் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.