Skip to main content

ரூ. 1 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாகச் சிக்கிய டிஎஸ்பி

 

DSP arrested for taking bribe of Rs.1 lakh

 

திருச்சி மாவட்டம் பூலாங்குடியைச் சேர்ந்தவர் சிங்கமுத்து மனைவி கீதா(45) இவர் ஆவண எழுத்தராகத் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். குமார் பதிவு செய்த வீட்டு மனை தனக்குத்தான் சொந்தமானது என்று சுந்தரம் புகார் அளித்ததின் பேரில் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டு, குமார் மற்றும் எட்டு நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 

இந்த குற்ற வழக்கில் பத்திர எழுத்தர் கீதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் கடந்த 2021 ஆம் ஆண்டே பத்திர எழுத்தர் கீதாவை விசாரித்த போலீசார், கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் பத்திர எழுத்தர் கீதாவை மீண்டும் அழைத்து நேற்று(14.9.2023)  விசாரணை செய்துள்ளனர். 

 

அப்போது, பத்திர எழுத்தர் கீதாவை விசாரணை செய்த திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆல்பர்ட்(53) என்பவர், உன் மீது குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமலும் மேற்படி வழக்கிலிருந்து விடுவிப்பதற்கும் தனக்குத் தனியாக ஒரு லட்சம் லஞ்சமாக கொடுக்க வேண்டுமாறு மிரட்டிக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பத்திர எழுத்தர் கீதா, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் படி, இன்று(15.9.23) மதியம் 3 மணியளவில் டிஎஸ்பி ஆல்பர்ட், பத்திர எழுத்தர் கீதாவிடம் இருந்து ஒரு லட்சம் லஞ்ச பணத்தைப் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், டிஎஸ்பி ஆல்பர்ட்டை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். பின் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !