Skip to main content

முறுங்கை விலை கிலோ ரூ. 320... ஏக்கமாக தொட்டு பார்த்துவிட்டு செல்லும் பொதுமக்கள்!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

klj

 

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் முருங்கைக்காய் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக காய்கறிகள் விலை கடுமையான அளவுக்கு உயர்ந்தது. குறிப்பாக தக்காளி விலை கிலோ 160 ரூபாய் வரை விற்றது. தக்காளி விலை பொதுமக்களை வாட்டி வதைத்ததால், தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலைக்குத் தக்காளி விற்பனையைத் தொடங்கியது. இதனால் தக்காளி விலை தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு அடுத்த நாளே வெகுவாக குறைந்தது. தற்போது கிலோ தக்காளி 90 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இன்னும்  ஐந்து அல்லது ஆறு நாட்களில் தக்காளி விலை 50க்கும் கீழாக குறையும் என்று கூறப்படுகின்ற நிலையில், முருங்கைக்காய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக 180, 200 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுவந்த முருங்கைக்காய், தற்போது சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏக்கத்தோடு முருங்கைக்காயைப் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் கடும் அதிர்ச்சி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Air fares hike Passengers shocked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் வார விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 12 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 555 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 11 ஆயிரத்து 531 ரூபாயாக உள்ளது. மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 5 ஆயிரத்து 572 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 616 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Fee increase in toll booths
கோப்புப்படம்

தமிழகத்தில் உள்ள 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.