ராமநாதபுரம் மாவட்டம் அரசுப்பள்ளியில் இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என அம்மாணவியின் தாயாரிடம் அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி பகுதியில் உள்ள கல்லூரியில் அனைவருக்கும் ஒரே சீருடை தான் எனவும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என கூறி பள்ளி நிர்வாகம் ஹிஜாப் அணிய தடை விதித்தது. தொடர்ந்து கர்நாடக கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் ஹிஜாப் அணிய தடை விதிப்பதாக தெரிவித்தது. அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றமும் அரசின் அறிவிப்பு சரியே என தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு தொடர்ந்து நடந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் அரசுப்பள்ளியிலும் அதே போன்று விவகாரம் ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த இஸ்லாமிய மாணவியை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். எனவே இது குறித்து கேட்க மாணவியின் தாயார் பள்ளிக்கு சென்றுள்ளார். மாணவியின் தாயாரிடம் தலைமை ஆசிரியர் அரசுப் பள்ளியில் அனைவருக்கும் ஒரே விதிமுறை தான் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து வெளியான வீடியோ பதிவில் தலைமை ஆசிரியர் மாணவியின் தாயாரிடம், “இந்த பள்ளியில் இந்த முறையை நான் கொண்டு வரவில்லை. இந்த பள்ளியில் இதான் நடைமுறை. பள்ளியில் சேர்க்கையின் போதே நான் தெளிவாக கூறினேன்” என கூறிய வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.