தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (12/10/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கிய நிலையில், தற்போது வரை நீடிக்கிறது. இதில், அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வின் இந்த தற்காலிக வெற்றி, ஜனநாயகத்தின் தற்காலிக தோல்வி. மாநில தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்குக் காட்டிய விசுவாசம், காவல்துறையையே மிஞ்சிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் நடந்தது வேறு, அது நேர்மாறு, அது நேர்மைக்கும் மாறு. வாக்கு எண்ணும் மையங்களில் வெளிப்படைத்தன்மைக் கடைப்பிடிக்கவில்லை. வாக்கு எண்ணும் மையங்களில் கண் துடைப்புக்காக மட்டும் சி.சி.டி.வி. கேமராக்கள் வைத்திருந்தார்கள். சில இடங்களில் மாற்றுக் கட்சியினரை வெளியேற்றிய பின் ரகசியமாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. இத்தனை இடையூறு மத்தியில் பா.ஜ.க.வுக்கும், தோழமைக் கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கு வாழ்த்துக்கள்" என்று விமர்சித்துள்ளார்.