Skip to main content

எடப்பாடி அரசே... பதவி விலகு... - ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

dmk struggle in erode

 

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களை கண்டித்தும் அதற்குத் துணைபோன தமிழக அ.தி.மு.க அரசைக் கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

ஈரோட்டில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் 28 இடங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்ட தி.மு.க அலுவலகம் முன்பு தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணைப்பொதுச் செயலாளர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் பி. கே. பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகாஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதே போல் கூட்டணிக் கட்சிகளான ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொ.ம.தே.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உட்பட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அதேபோல் ஈரோடு மாநகர் பகுதியில் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி ,திண்டல், எல்லை மாரியம்மன் கோவில், ஆர்.என். புதூர் உள்பட பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

dmk struggle in erode


கோபியில் வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். இதைப்போல் கொடுமுடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். அவல்பூந்துறை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் உள்பட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். மொடக்குறிச்சி, லக்காபுரம், அரச்சலூர், சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி என மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் இவ்வாறான கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏர் கலப்பையுடனும் நாற்று நட்டும் "மத்திய அரசே... மோடி அரசே... விவசாயிகளை வஞ்சிக்காதே... பா.ஜ.க.வின் துரோகத்திற்கு துணைபோன எடப்பாடி அரசே! பதவி விலகு... பதவி விலகு..." எனக் கோஷமிட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.