Skip to main content

பொது இடத்தில் மக்கள் கிராம சபையை நடத்த திடீர் தடை! போலீசார்- தி.மு.க.வினர் வாக்குவாதம்!!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

dmk party makkal grama sabha salem district

 

சேலம் அருகே, பொது இடத்தில் தி.மு.க.வினர் மக்கள் கிராமசபைக் கூட்டங்களை நடத்தக்கூடாது என்று காவல்துறையினர் திடீரென்று முட்டுக்கட்டை போட்டதால், கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் கிராமங்களில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள தி.மு.க.வினருக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் சார்பில் காரிப்பட்டி, உடையாப்பட்டி, ஏ.என்.மங்கலம், அனுப்பூர், மின்னாம்பள்ளி ஆகிய ஊர்களில் ஏற்கனவே மக்கள் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன.

 

இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள வலசையூரில் புதன்கிழமை (டிச. 30) மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில் கட்சியினர் மும்முரமாக மேற்கொண்டு வந்தனர். காலை 08.00 மணியளவில், வலசையூர் பேருந்து நிறுத்தம் அருகே ஷாமியானா பந்தல், தரை விரிப்புகள், மைக் செட் கட்டும் பணிகள் நடந்தன. 

 

அப்போது அங்கு வந்த வீராணம் காவல்துறையினர், பொது இடத்தில் கிராம சபைக்கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று திடீரென்று முட்டுக்கட்டை போட்டனர். மைக் செட் கட்டக்கூடாது என்றும் கறாராக கூறினர். அடுத்த ஒருமணி நேரத்தில் பொதுமக்கள் கிராமசபைக் கூட்டத்திற்கு வந்துவிடும் நிலையில், காவல்துறையினரின் திடீர் உத்தரவால், தி.மு.க.வினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

 

ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் விளக்கம் அளித்தும் காவல்துறையினர் ஏற்கவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், ஷாமியான பந்தல், தரைவிரிப்புகள் போன்றவற்றை அகற்றும்வரை காவல்துறையினர் அங்கேயே நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து, அதே பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காலை 11.00 மணிக்கு மேல்தான் மக்கள் கிராமசபைக் கூட்டம் தொடங்கியது. 

dmk party makkal grama sabha salem district

கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் சிலர், சாலை, சாக்கடைக் கால்வாய், தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் கடந்த பத்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது என்று குற்றம் சாட்டினர். மேலும் சிலர் கூறுகையில், தொட்டில் ஏரி பகுதியில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதாகவும், பல ஏக்கர் பரப்பளவுள்ள பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும், என்றும் கோரிக்கை விடுத்தனர். சின்னனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி செய்து தரவும், கழிப்பறைக்குத் தண்ணீர் வசதி வேண்டியும் புகார் மனு அளித்தனர். 

 

இந்த கிராமத்திலும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை ஆகியவற்றை கோரி விண்ணப்பிக்கும் பலருக்கு கிடைப்பதில்லை என்றும் அதிருப்தியுடன் கூறினர். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது திறக்கப்பட்ட ஊர்ப்புற நூலகத்தை, அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு மூடப்பட்டு விட்டதாகவும் கூறினர்.

 

இது தொடர்பாக விஜயகுமார் கூறுகையில், ''அ.தி.மு.க. ஆட்சியில், கிராமப்புற பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளாக எந்த ஒரு வளர்ச்சித் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தி.மு.க. நடத்தி வரும் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக மக்கள் வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றனர். இதையெல்லாம் ஆளுங்கட்சியினரால் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், காவல்துறை மூலம் எங்களுக்கு பல்வேறு இடையூறுகளை அளிக்கின்றனர். 

 

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார் ஒரு மக்கள் பிரதிநிதியாக கிராம மக்களைச் சந்தித்துக் குறைகளை கேட்பதில் எந்த விதிமீறலும் கிடையாது. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். ஆனால், காவல்துறையினர் பாரபட்சமாக, உள்நோக்கத்துடன் தி.மு.க.வினர் நடத்தும் கூட்டங்களுக்குத் தடை போடுவது கண்டிக்கத்தக்கது,'' என்றார். 

 

அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் முத்து, பொருளாளர் வெங்கட்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தில், பாரதி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு, வீடு வீடாகச்சென்று தி.மு.க.வுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.