Skip to main content

பொது இடத்தில் மக்கள் கிராம சபையை நடத்த திடீர் தடை! போலீசார்- தி.மு.க.வினர் வாக்குவாதம்!!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

dmk party makkal grama sabha salem district

 

சேலம் அருகே, பொது இடத்தில் தி.மு.க.வினர் மக்கள் கிராமசபைக் கூட்டங்களை நடத்தக்கூடாது என்று காவல்துறையினர் திடீரென்று முட்டுக்கட்டை போட்டதால், கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் கிராமங்களில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள தி.மு.க.வினருக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் சார்பில் காரிப்பட்டி, உடையாப்பட்டி, ஏ.என்.மங்கலம், அனுப்பூர், மின்னாம்பள்ளி ஆகிய ஊர்களில் ஏற்கனவே மக்கள் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன.

 

இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள வலசையூரில் புதன்கிழமை (டிச. 30) மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில் கட்சியினர் மும்முரமாக மேற்கொண்டு வந்தனர். காலை 08.00 மணியளவில், வலசையூர் பேருந்து நிறுத்தம் அருகே ஷாமியானா பந்தல், தரை விரிப்புகள், மைக் செட் கட்டும் பணிகள் நடந்தன. 

 

அப்போது அங்கு வந்த வீராணம் காவல்துறையினர், பொது இடத்தில் கிராம சபைக்கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று திடீரென்று முட்டுக்கட்டை போட்டனர். மைக் செட் கட்டக்கூடாது என்றும் கறாராக கூறினர். அடுத்த ஒருமணி நேரத்தில் பொதுமக்கள் கிராமசபைக் கூட்டத்திற்கு வந்துவிடும் நிலையில், காவல்துறையினரின் திடீர் உத்தரவால், தி.மு.க.வினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

 

ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் விளக்கம் அளித்தும் காவல்துறையினர் ஏற்கவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், ஷாமியான பந்தல், தரைவிரிப்புகள் போன்றவற்றை அகற்றும்வரை காவல்துறையினர் அங்கேயே நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து, அதே பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காலை 11.00 மணிக்கு மேல்தான் மக்கள் கிராமசபைக் கூட்டம் தொடங்கியது. 

dmk party makkal grama sabha salem district

கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் சிலர், சாலை, சாக்கடைக் கால்வாய், தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் கடந்த பத்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது என்று குற்றம் சாட்டினர். மேலும் சிலர் கூறுகையில், தொட்டில் ஏரி பகுதியில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதாகவும், பல ஏக்கர் பரப்பளவுள்ள பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும், என்றும் கோரிக்கை விடுத்தனர். சின்னனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி செய்து தரவும், கழிப்பறைக்குத் தண்ணீர் வசதி வேண்டியும் புகார் மனு அளித்தனர். 

 

இந்த கிராமத்திலும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை ஆகியவற்றை கோரி விண்ணப்பிக்கும் பலருக்கு கிடைப்பதில்லை என்றும் அதிருப்தியுடன் கூறினர். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது திறக்கப்பட்ட ஊர்ப்புற நூலகத்தை, அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு மூடப்பட்டு விட்டதாகவும் கூறினர்.

 

இது தொடர்பாக விஜயகுமார் கூறுகையில், ''அ.தி.மு.க. ஆட்சியில், கிராமப்புற பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளாக எந்த ஒரு வளர்ச்சித் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தி.மு.க. நடத்தி வரும் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக மக்கள் வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றனர். இதையெல்லாம் ஆளுங்கட்சியினரால் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், காவல்துறை மூலம் எங்களுக்கு பல்வேறு இடையூறுகளை அளிக்கின்றனர். 

 

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார் ஒரு மக்கள் பிரதிநிதியாக கிராம மக்களைச் சந்தித்துக் குறைகளை கேட்பதில் எந்த விதிமீறலும் கிடையாது. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். ஆனால், காவல்துறையினர் பாரபட்சமாக, உள்நோக்கத்துடன் தி.மு.க.வினர் நடத்தும் கூட்டங்களுக்குத் தடை போடுவது கண்டிக்கத்தக்கது,'' என்றார். 

 

அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் முத்து, பொருளாளர் வெங்கட்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தில், பாரதி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு, வீடு வீடாகச்சென்று தி.மு.க.வுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.