Skip to main content

திமுக பொருளாளர் துரைமுருகன் குடும்பத்துக்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல்!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

தமிழகம் முழுவதும் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோகம் செய்யும் ஆலைகளை கண்டறிந்து சீல் வைக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே திமுக பொருளாளர் துரைமுருகனின் மருமகளும், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் மனைவியுமான சங்கீதா பெயரில் அருவி என்கிற குடிநீர் ஆலை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.


இந்த அருவி ஆலையில் மார்ச் 2- ஆம் தேதி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஆலையில் 3 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது, அதில் ஒரு ஆழ்துளை கிணறுக்கு அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளது எனக் காரணம் கூறி அதற்கான லைனை துண்டித்து சீல் வைத்துள்ளனர்.

dmk party leader duraimurugan water plant officers

இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் சாலை நகரில் இயங்கிவரும் பியூர் அக்வா, அனாண்டபட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஆக்குவாஜெல், தூய நெஞ்சக் கல்லூரி அருகில் உள்ள தரணி அக்வா, செலந்தம்பள்ளி கிராமத்தில் உள்ள சைன் அக்குவா, ஆதியூர் கிராமத்தில் உள்ள எம்ஆர்பி அக்குவா ஆகிய 5 குடிநீர் ஆலைகளுக்கு எவ்வித ஆவணமும் இன்றி வாட்டர் கேன்களில் தண்ணீர் நிரப்பி சப்ளை செய்து வந்துள்ளனர். 


இந்த தகவல் அறிந்த நிலத்தடி நீர் அலுவலர்கள் மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் அனுமதி இல்லாத 5 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.


இதுவரை வேலூர், திருப்பத்தூர் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் 45- க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் அனுமதியில்லாமல் இயங்கியதாக சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் ஆறாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'காமராஜருக்கு நடந்த நிகழ்வு எனக்கும் நடந்தது'- பரப்புரையில் முதல்வர் சொன்ன சுவாரஸ்யம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'What happened to Kamaraj also happened to me' - the chief minister said interestingly in the lobby


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து கோட்டை மைதானம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

பரப்புரை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். தேர்தல் சீசனுக்கு மட்டுமே பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார். வெள்ள நிவாரணம் கேட்டால் தரமாட்டார். தமிழ்நாட்டை வெறுக்கின்ற பிரதமர் மோடிக்கு பதிலாக இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமராக போகிறவர் நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின் மேல் உண்மையான மதிப்பும், இந்திய மக்கள் மீது உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கின்ற பண்பும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக நிற்பவருமாக இருப்பார்.

இன்று காலையில் நான் பெருமை கொள்ளக்கூடிய ஒரு செய்தியை சமூக வலைத்தளத்தில் பார்த்தேன். நம்முடைய திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. இன்று கனடா நாட்டில் காலை உணவு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த திட்டம் எப்படி உருப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜர் மத்திய உணவு திட்டம் கொண்டு வந்ததற்கு காரணமாக ஒரு சம்பவத்தை சொல்லுவார்கள். பெருந்தலைவர் காரில் போய்க் கொண்டிருந்தபோது விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரை சந்தித்தாராம். அங்கு காரை நிறுத்தி அவர்களை பக்கத்தில் வரச் சொல்லி 'இன்று பள்ளிக்கு போகவில்லையா?' என்று கேட்டார். அந்த பிள்ளைகள் 'எங்கள் குடும்பத்தில் உணவுக்கே வழி இல்லாததால் எங்க அப்பா அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை' என்று சொல்லவும் பள்ளியில் மதிய உணவு போட்டால் அதற்காகவாவது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என சிந்தித்து யோசித்து காமராஜர் மதிய உணவு திட்டத்தை தொடங்கினார்.

எனக்கும் அதே மாதிரி ஒரு நிகழ்வு நடந்தது. நான் முதலமைச்சரானவுடன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். ஒரு குழந்தையை பார்த்து 'என்னம்மா சாப்பிட்டீங்களா' என்று எதார்த்தமா கேட்டேன். அந்த குழந்தை 'வீட்டில் அப்பா அம்மா வேலைக்கு போறாங்க, காலையில உணவு செய்ய மாட்டாங்க அதனால் சாப்பிடவில்லை' என்று சொன்னதும் எனக்கு மனசே சரியில்லை.

கோட்டைக்கு போனவுடனே அதிகாரிகளை அழைத்தேன். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வரணும் திட்டத்தை தயார் பண்ணுங்கள் என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம் ரொம்ப பணிவாக சார்  நம்ம நிதிநிலை ரொம்ப மோசமா இருக்கு. அதோடு இல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூட நாம் இதை சொல்லவில்லை என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன், 'வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன நம் எதிர்கால தலைமுறை குழந்தைகள் தான். அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் படிப்பது மனதில் மனதில் பதியும். இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதி நிலையை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்க ஃபைலை தயார் பண்ணுங்கள்' என்று சொன்னேன். அந்த ஃபைலில் கையெழுத்து போட்ட கை தான் இந்த ஸ்டாலின் கை''என்றார்.

Next Story

ஏரியில் குளிக்க முயன்ற 4 பெண்கள் உயிரிழப்பு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
4 women lose their live while trying to bathe in the lake

கோவிலுக்குச் சென்ற நான்கு பெண்கள் ஏரியில் குளிக்கும் முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் அவருடைய மகள் லலிதா மற்றும் கல்லூரி மாணவி காவியா அவருடைய தங்கை ப்ரீத்தா ஆகியாருடன் சேர்ந்து வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்த அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே உள்ள வேப்பூர் ஏரியை சுற்றி பார்த்துள்ளனர்.

பின்னர் குளிப்பதற்காக ஏரியில் நான்கு பேரும் இறங்கியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட, அவரை மீட்க மற்ற மூன்று பேரும் முயன்றுள்ளனர். இதில் நான்கு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். நீரில் சிலர் தத்தளிப்பது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வர, உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் நால்வரும் உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா ஆகிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.