Skip to main content

முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Published on 24/10/2021 | Edited on 24/10/2021

 

dmk MP's bail plea dismissed court order

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள பணிக்கன்குப்பத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த கடலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்- க்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டுவைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி, கடந்த செப்டம்பர் மாதம் 20- ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

 

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி தொழிற்சாலை உரிமையாளரும், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, ரமேஷின் உதவியாளர்கள் நடராஜன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார். நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்ட ரமேஷை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், கடந்த அக்டோபர் 13- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்தனர். பின்னர் கடலூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அக்டோபர் 27- ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.

 

இந்த நிலையில் ஜாமீன் கேட்டு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ரமேஷ் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் (22/11/2021) வந்த நிலையில், அக்டோபர் 23- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, நீதிபதிகள் முன்னிலையில் நேற்று (23/10/2021) விசாரணைக்கு வந்தது.  அப்போது, ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவராஜ், " நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ரமேஷ் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப் பதிந்தும் ஓடி ஒளியாமல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். வழக்கில் அவருக்கு தொடர்புள்ளதாக ஆதாரம் இல்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கோரினார்.

 

ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன், "இந்த வழக்கு தொடர்பாக 43 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கோவிந்தராஜ் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமாகியுள்ளது. எனவே விசாரணை பாதிக்கும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என்று ஆட்சேபம் தெரிவித்தார். அதேபோன்று கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல் தரப்பு வழக்கறிஞர்களும், ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜவஹர் உத்தரவிட்டார்.

 

இதனிடையே ரமேஷின் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 5 பேருக்கு நேற்று முன்தினம் (22/10/2021) நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து, கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஐந்து பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க இரண்டு நாட்கள் அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

 

இந்த மனு நேற்று (23/10/2021) நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர்களை ஒரு நாள் மட்டும் விசாரணைக்கு அனுமதி வழங்கி இன்று (24/10/2021) பகல் 12.30 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து, நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, சுந்தர் (எ) சுந்தர்ராஜ், வினோத் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் நேற்று (23/10/2021) பகல் 12 30 மணியளவில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், விசாரணையை நேற்று இரவே சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் முடித்த நிலையில், அன்று இரவே நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் நவம்பர் 2- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.