Skip to main content

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு எதிரான வரைவு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய அனுமதி கோரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்!  

Published on 26/01/2021 | Edited on 26/01/2021

 

DMK MP JAGATHRATSHAKAN CHENNAI HIGH COURT CBCID

நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு எதிரான வரைவு  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது

 

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான  ஜெகத்ரட்சகன், கடந்த 1995- ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக, குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், ஜெகத்ரட்சகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் ஸ்ரீ நிஷா ஆகியோர்,  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகினர். அதேபோல,  கடந்த ஆண்டு நவம்பர் 12- ஆம் தேதி சி.பி.சி.ஐ. டி போலீசார், ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, சென்னை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை ஆராய்ந்தனர்.

 

இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர்  ஏ.நடராஜன், ‘ஜெகத்ரட்சகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல,  ஜெகத்ரட்சகனுக்கு எதிரான வரைவு குற்றப்பத்திரிக்கை தயாராக இருக்கிறது. நீதிமன்றம் அனுமதித்தால், அதனை தாக்கல் செய்யவும்,  தேவைப்பட்டால் வரைவு குற்றப்பத்திரிகையை மனுதாரர் தரப்புக்கும் வழங்கவும்  தயாராக இருக்கிறோம்.‘ என்று தெரிவித்தனர்.

 

ஜெகத்ரட்சகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதித்தால் வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவின் நோக்கமே அர்த்தமற்றதாகிவிடும்’ எனக்  கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.

 

‘வரைவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதால், மனுதாரர் தரப்புக்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது, ஏற்கனவே உள்ள வழக்கோடு சேர்த்து வரைவு குற்றப்பத்திரிகையையும் எதிர்த்து வாதிடலாமே?’ எனத் தெரிவித்த நீதிபதி, ‘சட்டப்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக வரைவு குற்றப்பத்திரிகையை மனுதாரருக்கு கொடுக்கலாமா என்பது குறித்து, இரண்டு தரப்பும் கலந்துப் பேசி முடிவெடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் 25- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

ஜெகத்ரட்சகனை கைது செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை, அது வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.