Skip to main content

தி.மு.க. எம்.எல்.ஏ மற்றும் அ.தி.மு.க முன்னாள் எம்.பி இடையே வாக்குவாதம்... நிகழ்ச்சியில் பரபரப்பு!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2 கோடிக்கான சாலைப்பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு இன்று (10/02/2020) காலை 10.00 மணியளவில் அதற்கான விழா பேரூராட்சியின் செயலர் சாந்தியின் பொறுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. 


அதில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி்.பிரபாகரன் வந்திருந்தார். நிகழ்ச்சியை அ.தி.மு.க.வின் நகரச் செயலாளரும், காண்ட்ராக்டருமான சங்கர் ஏற்பாடு செய்திருந்தார். இதனையறிந்த தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க.வின் பூங்கோதையும் இங்கு வர, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களும் திரண்டிருக்கிறார்கள். ஆனால் முறைப்படி இந்த நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டிய எம்.எல்.ஏ. பூங்கோதையை நிர்வாகம் அழைக்கவில்லையாம். காரணம் இந்தத் திட்டத்தை நாமே கொண்டு வந்தாக வெளியே தெரியப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வின் நகர செயலாளரும்,  முன்னாள் எம்.பி. பிரபாகரன் இருவரின் திட்டமாம்.

DMK MLA AND ADMK EX MP TENKASI GOVERNMENT FUNCTION

ஆனால் இவர்கள், எம்.எல்.ஏ. பூங்கோதை அங்கு வருவார் என எதிர்பார்க்கவில்லையாம். வந்த எம்.எல்.ஏ. இது அரசு நிகழ்ச்சி் என்னை அழைக்கவில்லை. ஆனால் நிதி பெற்றுத் தந்தது நான். அப்படியிருக்க முன்னாள் எம்.பி.யை எப்படி அழைக்கலாம் என்று பேரூராட்சி செயலர் சாந்தியிடம் விபரம் கேட்க, செயலரோ எனக்கு கோர்ட் வேலையிருக்கிறது என்று கிளம்பி விட்டாராம்.
 

அது சமயம் முன்னாள் எம்.பி்.பிரபாகரன், இது அரசு ஒதுக்கிய பணம். நாங்கள்தான் நிகழ்ச்சியை நடத்துவோம் என்று எதிர் வாக்குவாதம் செய்ய, எம்.எல்.ஏ. பூங்கோதையோ, எனது தொகுதி. நான் ஊரக வளர்ச்சித்துறை மூலம் பெறப்பட்ட நிதி. மக்கள் வரிப்பணம். இதில் நீங்கள் நிகழ்ச்சி நடத்தக் கூடாது. ஒரு முன்னாள் எம்.பி. நீங்கள் எப்படி வரலாம். என்று பதிலுக்குக் கேட்க, வந்திருந்த இரண்டு கட்சியினருக்குள்ளே பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இருதரப்பினரும் கோஷமிட்டனர். மோதல் சூழல் நிலைமை திசை திரும்புவதையறிந்த முன்னாள் எம்.பி. பிரபாகரன், இருவரும் சேர்ந்தே நடத்தலாம் என்று எம்.எல்.ஏ.விடம் சமாதானம் பேச, பின்பு ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்திருக்கிறது.

DMK MLA AND ADMK EX MP TENKASI GOVERNMENT FUNCTION

எம்.எல்.ஏ. என்ற வகையில் எனது தொகுதிக்கு நான் செய்ய வேண்டிய திட்டப் பணியை நானே ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதை நான் ஒரு நிகழ்ச்சியாகக் கூட நடத்த நான் நினைக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க. நகர செயலாளரும், எம்.பி.யும் திட்டமிட்டு தாங்கள் கொண்டு வந்ததாக மக்களைத் திசை திருப்பவே இந்த ஏற்பாடு. எம்.பி.யின் பதவி முடிந்து விட்டது. அவருக்கு இங்கு என்ன வேலை. அவர் வந்ததால்தான் விவகாரமானது என்கிறார் எம்.எல்.ஏ.பூங்கோதை.
 

பதவி காலாவதியானாலும் அரசியலில் முகவரி இருக்க வேண்டும். தவறினால் அரசியல் உலகம் ஒதுக்கித் தள்ளிவிடுமே என்ற அரிச்சுவடிதான் அடிப்படை போல.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.