கடந்த 2017- ஆம் ஆண்டு, பிப்ரவரி 18- ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 10- ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016- ஆம் ஆண்டு டிசம்பர் 5- ஆம் தேதி மரணமடைந்ததை அடுத்து, ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். பின்னர் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர், முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி 2017 பிப்ரவரி 18- ஆம் தேதி, பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்து, ரகசிய வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தும், அதை ஏற்காத சபாநாயகர், திமுக உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது சட்டவிரோதமானது எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பிலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் இறுதி விசாரணையை நவம்பர் 10- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.