தஞ்சாவூரில் பேக்கரியோடு உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கியதில் ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகிகள் பேக்கரியை சூரையாடப் பொதுமக்கள் திமுகவினரை அடித்து துவைத்து படுக்க வைத்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர திமுக இளைஞரணி செயலாளர் சுதாகர், நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாண்டவர், மாணவரணி துணை செயலாளர் முருகேசன் உள்பட 8 பேர் தஞ்சையில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று கறி விருந்து சாப்பிட்டு ஊருக்குத் திரும்பும் வழியில் பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே உள்ள ஒரு பேக்கரியுடன் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கச் சென்றுள்ளனர். அப்போது கடையிலிருந்த பாட்டில்களை உருட்ட கடையிலிருந்த பெண் ரேவதி கேட்டதால் வாக்குவாதம் செய்து பணம் தராமல் போயிடுவோம் என்று பேசிக்கொண்டே கடை பெண் ஊழியரைத் தொட முயன்றுள்ளனர்.
அப்பொழுது பேக்கரியில் இருந்த உரிமையாளர் ஆனந்த மகன் வசந்த் ஆகியோர் என்ன பிரச்சனை என்று கேட்ட போது அவருடனும் தகராறில் ஈடுபட்டதால் உடனே மற்றொரு ஊழியர் கடை உரிமையாளர் சூரக்கோட்டை ஆனந்துக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வருவதற்குள் பேக்கரி சூரையாடப்பட்டு விட்டது. பேக்கரி உரிமையாளர் ஆனந்த் வரும் போதே கிராமத்தினர் பலரையும் அழைத்து வந்ததால் அவர்கள் பேக்கரியை உடைத்து தகராறில் ஈடுபட்ட மன்னார்குடி திமுக பிரமுகர்களை அடித்து உதைத்து யாரும் எழ முடியாத அளவுக்கு தாக்கி படுக்க வைத்துவிட்டனர். 8 பேரில் 2 பேர் ஓடி ஒழிந்து கொண்டதால் மீதமிருந்த 6 பேரும் படுகாயத்துடன் கிடந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அதேபோல திமுகவினர் தாக்கியதில் காயமடைந்த பேக்கரி ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கடை பெண் ஊழியர் ரேவதி, மன்னார்குடிக்காரர்கள் 6 பேர் மீதும் மன்னார்குடி பாண்டவர் கொடுத்த புகாரின் பேரில் பேக்கரி ஊழியர்கள் உள்பட 9 பேர் மீதும் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை பெரிதாக்க வேண்டாம். சமாதானமாக போகலாம் என்று மன்னார்குடி திமுக புள்ளிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே மன்னார்குடி திமுகவினரோ.. திமுக தலைமை வரை தகவல் போய்விட்டதால் கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியவர்களை நீக்கம் செய்யப் போகிறார்கள் என்றனர்.