Skip to main content

ரேஷன் அரிசி அளவைக் குறைத்து அரசுப் பணத்தில் அ.தி.மு.க.-வுக்கு விளம்பரமா? – ஐ.பெரியசாமி கேள்வி...

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

I. Periyasamy


ரேஷன் கடையின் மூலம் மக்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக நிவாரணம் என்ற பெயரில் அ.தி.மு.க. கட்சி சார்பாகக் கொடுத்து அரசுப் பணத்தில் கட்சிக்கு விளம்பரம் தேடிக் கொண்டுள்ளார்கள் என்றும் மக்கள் பசியில் வாடும் போது ரேஷன் பொருள்களை முறையாக வழங்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.


திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர், ஐ.பெரியசாமி, தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையில் கூறியதாவது. 


"கரோனா கால கட்டத்தில ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்தார். அதன்படி தமிழக அரசு வழக்கமாகக் கொடுத்து வந்த அரிசியுடன் கூடுதலாக 5 கிலோ கொடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் முறையாகச் செயல்பாட்டில் இல்லை. ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிக்கிடக்கும் மக்கள் வாழ்வாதாரம் இன்றி இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு கூடுதலாகக் கொடுப்பதற்குப் பதிலாக வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் ஏற்கனவே வழங்கி வந்த அரிசியையும் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

 

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 01.11.2016 அன்று தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரிசி அளவுகளில் சில மாற்றங்களைச் செய்ய சொன்னது. மத்திய அரசு முன்னுரிமை குடும்பங்களுக்கு மட்டுமே அரிசி வழங்க வேண்டும் என்று தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் வலியுறுத்தியது. ஆனால் தமிழக அரசு முன்னுரிமை குடும்பங்கள் மற்றும் முன்னுரிமை அல்லாத குடும்பங்கள் என அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்குவோம் என்றார் ஜெயலலிதா. ஆனால் அதன்படி அரிசி கொடுக்கவில்லை.


தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டை பிரிவில் அப்பாவி ஏழை தொழிலாளிகள் பலர் உள்ளனர். முன்னுரிமை குடும்ப அட்டைகளில் செல்வந்தர்களும், வசதி படைத்தவர்களும் உள்ளனர். குடும்ப அட்டைகளில் உள்ள குளறுபடிகளைச் சமாளிக்க முடியாமல் இந்த அரசு திணறி வருகிறது. குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்க வேண்டும் ஆனால் தமிழக அரசு வழங்கவில்லை. ஏப்ரல், மே, மற்றும் ஜீன் மாதங்களில் ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசியின் அளவை மாற்றியது. தமிழக அரசு ஏப்ரல் 27ஆம் தேதிதான் அந்த அரசாணையை வெளியிட்டது. ஆனால் அந்த அளவின் படி ஏப்ரல் மாத அரிசி மக்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்குள் ஏப்ரல் மாதத்திற்குரிய பொருட்கள் பழைய முறையில் வழங்கப்பட்டன.


ஏப்ரல் மாத ஒதுக்கீடு அரிசியை மே மாதம் 50 சதவீதமும், ஜீன் மாதம் 50 சதவீதமும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார்கள். இதுகுறித்து அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பரம் செய்து பிளக்ஸ் போர்டு வைக்க வேண்டும் என்று கூட்டுறவுப் பதிவாளர் ஆணை பிறப்பித்தார். ஆனால் எந்தக் கடையின் முன்பும் பிளக்ஸ் போர்டு வைக்கவில்லை. ஏப்ரல் மாதத்தில் கொடுக்காமல் விட்ட அரிசியை மீண்டும் ரேஷன்கடையின் மூலம் மக்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக நிவாரணம் என்ற பெயரில் அ.தி.மு.க. கட்சி சார்பாக கொடுத்து அரசுப் பணத்தில் கட்சிக்கு விளம்பரம் தேடிக் கொண்டார்கள்.


பல மாவட்டங்களில் அமைச்சர்கள் தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல் ரேஷன் அரிசியைக் கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்டார்கள் எனப் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது அராஜகத்தின் உச்சமாக உள்ளது. மக்களுக்குக் கொடுக்க வேண்டிய அரிசியை அமைச்சர்கள் கைப்பணம் செலவழித்துக் கொடுப்பது போல் ஆதாயம் தேடி வருகிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கரோனா ஊரடங்கு காலத்தில பசி பட்டினியுடன் வாழும் ஏழை மக்களுக்கு மே, ஜீன் மாதம் கொடுக்க வேண்டிய 50 சதவீத அரிசியை இன்று வரை கொடுக்கவில்லை. ஜனநாயக முறைப்படி அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய அரிசியைக் கொடுக்காமல் அவர்களுக்குத் தமிழக அரசு துரோகம் செய்துள்ளது.


நான்கு நபர் உள்ள குடும்பங்களுக்கு 20 ப்ளஸ் 20 என 40 கிலோ அரிசி வழங்கப்பட்டது. 8 நபர்கள் உள்ள குடும்பங்களுக்கு 20 ப்ளஸ் 40 என 60 கிலோ அரிசி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 4 நபர் கார்டுகளுக்கும் 8 நபர் கார்டுகளுக்கும் 40 கிலோ அரிசி தான் வழங்குவோம் என அறிவித்திருக்கிறார்கள். இது கரோனா ஊரடங்கு காலத்தில் பசி, பட்டினியுடன் வாழும் சாமானிய மக்கள் மீது செலுத்தப்பட்ட வன்முறை ஆகும். இதை உடனடியாகச் சரி செய்து முறையான அரிசி வழங்க வேண்டும்.

 

http://onelink.to/nknapp


இது போல நபர் ஒன்றுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்தார். தற்போது ரேஷனில் கொடுக்கப்படும் துவரம்பருப்பு மத்திய அரசு கொடுத்ததா? மாநில அரசு கொடுத்ததா? எனத் தெரியவில்லை. மத்திய அரசு கொடுத்த துவரம்பருப்பு என்றால் மாநில அரசு ஏற்கனவே வழங்கி வந்த துவரம்பருப்பு எங்கே போனது? என்னவானது?


தமிழக அரசு மார்ச் மாதம் முதல் பொது விநியோக திட்டத்தில் நடைபெற்ற விநியோகம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். கரோனா காலத்திலும் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசியில் முறைகேடு செய்யும் தமிழக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தொடர்ந்து மக்களை வதைக்காமல் அவர்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை முறையாக வழங்க வேண்டும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.