அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று (13/09/2022) அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு சென்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், தன்னை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகத்தை வீட்டிற்குள் செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சி.வி.சண்முகம் எம்.பி., "கோவை ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பிரச்சனையில் ஜி ஸ்கொயர் சம்பந்தப்பட்டிருப்பதால் அதை திசை திருப்பவே சோதனை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கவே எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விலைவாசி, சொத்து வரி, மின் கட்டணம், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; தவறிழைக்கும் தி.மு.க. தப்பவே முடியாது. எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்க தி.மு.க. அரசு முயற்சிக்கிறது" எனத் தெரிவித்தார்.