Skip to main content

கரோனா விழிப்புணர்வு – தீவிரமாக களமிறங்கிய திமுகவினர்!

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் சிலர் கரோனா தாக்கம் புரியாமல் இருசக்கர வாகனங்களில், சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக இந்த நோய் வேகமாக பரவி வருகிறது.

 

 DMk Corona virus awareness

 



ஊரடங்கு உத்தரவால் அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளனர். திமுக தனது பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்வதையும் தள்ளி வைத்துள்ளது. அதே நேரத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலமாக தொடர்புகொண்டு பேசிவருகிறார். அதேபோல் திமுக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மேலும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கரோனா வார்டாக பயன்படுத்திக்கொள்ள அரசுக்கு மனு தந்துள்ளது திமுக.

அதேபோல் மாநில அளவில் மட்டுமல்லாமல், மாவட்ட அளவிலும் திமுகவினர் களம் இறங்கியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தினமும் உணவு வழங்குவதை, ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான காந்தி ஏற்றுக்கொண்டு பிரியாணி வழங்கி வருகிறார். அதேபோல் அவர்களுக்கு முக கவசம், கையுறை போன்றவற்றையும் வழங்கியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், தெற்கு மாவட்ட திமுக சார்பில் இரண்டு வாகனங்கள் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்வுக்காக வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றன. கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள காவல்துறையினருக்கு முகக்கவசம், கை கவசம், கை கழுவ கிருமி நாசினி போன்றவற்றை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மருத்துவர் எ.வ.வே.கம்பன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தியிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மார்ச் 31ந்தேதி, திருவண்ணாமலை மாவட்ட தலைநகரத்தில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், கை கவசம், முகக் கவசம் போன்றவற்றை திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட செய்தியாளர்கள் மன்றத்திற்கு வந்து வழங்கினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.