Skip to main content

அடாவடி ஜெயமோகனைக் காப்பாற்றும் தி.மு.க. தோழமைகள்!

Published on 16/06/2019 | Edited on 17/06/2019


‘புளித்தமாவு’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நாகர்கோவில் பெட்டிக்கடையில் அடாவடி  செய்து, கடைக்காரரின் மனைவியை படுமோசமான வார்த்தைகளால் பேசி, அவர் முகத்தில் மாவு பாக்கெட்டை வீசி அடித்த நிலையில், அவரது கணவரிடம் செம அடி வாங்கினார். இந்த இருதரப்பு கைககலப்பில் ஜெயமோகனை மட்டும் உத்தமராக்கி, கடைக்காரரையும் அவர் மனைவியையும் குற்றவாளியாக்கி சிறையில் தள்ளும் வேலைகளைக் கச்சிதமாக ஆரம்பித்துவிட்டார்கள் அரசியல் செல்வாக்குள்ளவர்கள்.

 

DMK Companionship to save the Atavadi Jayamohan



கடைக்காரர் செல்வத்தின் மனைவி கீதா கொடுத்த புகாரை உள்ளூர் காவல்துறை ஏற்க மறுத்த நிலையில், ஜெயமோகன் அளித்த புகாருக்காக பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் லோக்கல் போலீசிடம் பிரஷர் கொடுத்துள்ளனர். இத்தனைக்கும் செல்வத்தின் அண்ணன் பா.ஜ.க.வின் நகர வழக்கறிஞர் பிரிவு பொறுப்பில் இருக்கிறார். அவர், உண்மை நிலவரத்தை போலீசிடம் எடுத்துச் சொல்வதற்காக, தொடர்ந்து தொடர்பு கொண்டும் காவல்துறை அதிகாரிகள் அவரது போனை எடுக்கவில்லை.

 

இந்நிலையில், பா.ஜ.க. பிரமுகர்களின் ஆதரவு பெற்ற ஜெயமோகனுக்காக விழுப்புரம் எம்.பியும் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் வென்றவருமான ரவிக்குமார் மிகுந்த சிரத்தையெடுத்து செயல்பட்டு வருகிறார். இதேபோல் தென் சென்னை திமுக எம்பியான தமிழச்சி தங்கப்பாண்டியனும் ஜெயமோகனுக்கு ஆதரவாக சிபாரிசு செய்துள்ளாராம்.  ஒரு பெண்ணிடம் அடாவடி செய்த நபருக்கு துணைபோவது கண்டு, நாகர்கோவில் தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடைக்காரர் செல்வம், தி.மு.க.வின் பகுதிச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.



நியாயமான விசாரணை என்றால் இருதரப்பு புகாரையும் ஏற்றுக்கொண்டு அதன்பிறகு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சம்பவம் நடந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே பிரியாணி கடை, பியூட்டி பார்லர் என தி.மு.க. ஆட்கள் தகராறு செய்தபோது, அவர்களை விமர்சித்தவர்கள் இப்போது கடையில் தகராறு செய்தவரை விட்டுவிட்டு, கடைக்காரர்களை குற்றவாளியாக்குவது என்ன நியாயம் எனனவும் கேட்கிறார்கள்.

 

DMK Companionship to save the Atavadi Jayamohan



கடைக்காரர் செல்வத்தின் மனைவி கீதா நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அட்மிட்டான பிறகு, ஒன்றரை மணிநேரம் கழித்து, திடீரென வந்து அட்மிட்டான ஜெயமோகன், தன்னுடைய படைப்பாள எம்.பி. கூட்டாளிகள் மற்றும் பா.ஜ.க. பிரஷரால், கடைக்காரர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது எனத் தெரிந்ததும் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டார். ஆனால், ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கீதா இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்.



கதை வசனகர்த்தாவான ஜெயமோகன் சிறந்த முறையில் சித்தரித்திருக்கும் இந்த அடாவடி ஸ்க்ரீன்ப்ளேவுக்கு ஆதரவாக மேலும் பல படைப்பாளிகளின் ஆதரவைத் திரட்டி, தி.மு.க.வைச் சேர்ந்த கடைக்காரருக்கு எதிராக ஜெயமோகனுக்கு சேவை செய்யும் பணியில் தி.மு.க.வின் தோழமையில் உள்ள எம்.பிக்கள் படுதீவிரம் காட்டி வருகிறார்கள். அடுத்தகட்டமாக, தி.மு.க. எம்.பி.க்கள் கவிஞர் கனிமொழி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரிடமும் ஜெயமோகனுக்கு ஆதரவான அறிக்கை பெறும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.



எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவில் இம்முறை அதிக படைப்பாளிகள் களமிறங்கி வெற்றி பெற்றிருப்பதாக சமூக வலைத்தள அறிவுஜீவிகள் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் என கம்பு சுற்றிய நிலையில், அந்த படைப்பாளிகளின் முதன்மைப் பணியாக, பெண்ணிடம் அடாவடி செய்த எழுத்தாளரைக் காப்பாற்றும் செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் கண்டுகொள்ளப்படாத அல்லது இழிவாகப் பார்க்கப்ப்பட்ட வழக்கமான அரசியல்வாதி எம்.பிக்களோ தங்கள் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க இயன்றளவு டேங்கர் லாரிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.



ஜெயமோகனுக்காக படைப்பாளிகள் வரிந்து கட்டினாலும், நாகர்கோவில் பகுதி பொதுமக்களும் குறிப்பாக பெண்களும் அவரது அடாவடியை எதிர்த்து களமிறங்கத் தயாராகிவிட்டனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Writer Devibharathi greeted the minister in person

ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.

எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.