Skip to main content

ஆங்கிலேயர்- தொண்டைமான் மன்னரிடையே எல்லை அமைத்தது தொடர்பான கல்வெட்டு வயலில் கண்டுபிடிப்பு!

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

Discovery in the field of inscriptions related to the demarcation between the English and the Thondaiman king!

 

தமிழ்நாட்டிலேயே அதிகமான தொல்லியல் சின்னங்கள், கல்வெட்டுகள், புதைவிடங்கள், வாழ்விடங்கள், சங்ககால கோட்டைகள் என ஆயிரக்கணக்கான வரலாற்று ஆதாரங்களைக் கொண்டுள்ள புதுக்கோட்டையில் மற்றுமொரு வரலாற்றுச் சின்னம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், நகரப்பட்டி உடைகுளம் வயலில் ஆங்கிலேயர் தொண்டைமான் மன்னரிடையே எல்லை அமைத்தது தொடர்பான கல்வெட்டு செவலூர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சரவணன் அளித்த தகவலின் பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் , தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

இக்கல்வெட்டு குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியதாவது, புதுக்கோட்டை தொண்டைமான்கள் மற்றும் ஆங்கிலேயரிடையே இணக்கமான உறவு இருந்துள்ளதைத் தொடர்ந்து, இந்திய ஆட்சிப்பிரதேசத்தில் தனித்துவமிக்க நிர்வாக சுதந்திரத்துடன் புதுக்கோட்டை சமஸ்தானம்  செயற்பட ஆங்கிலேய அரசு அனுமதித்திருந்தது. தொண்டைமான் ஆட்சிப்பகுதி எல்லை உள்ளிட்டவற்றை தெளிவாக வகுத்ததன் மூலம் எவ்வித முரண்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் இரு தரப்பு அரசுகளும் செயலாற்றியதை தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரப்பட்டி எல்லைக் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. 

 

Discovery in the field of inscriptions related to the demarcation between the English and the Thondaiman king!

 

கல்வெட்டுச்செய்தி : 
1.1822 வருஷம் சுலாயி 
2.மாதம் 11  சரியான தமிழ் சித்தி
3.ரை பானு வருஷம் ஆவணி மாதம் .
4.மதுரை சில்லாக்கலெக்க
5.ட்டர் மேஷ்த்தரவர்கள் சூபி
6.த்தார் துரையவர்களு
7.டைய உத்தரவுப்படிக்கி
8.மருங்காபுரி தாலுகா
9.வுக்கு சேற்ந்த கலிங்
10.கப்பட்டி கிராமத்து
11.தொண்டைமானார் புது
12.க்கோட்டையிலா .கால்
13.லம்பட்டி (மயிசல்) செயிது
14.யிந்த எல்கைக்கார்தி
15.ரங் கல் நடலாச்சுது என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

 

இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பின்படி1822- ஆம் ஆண்டு மதுரை கலெக்டர் மேஸ்தர் சுபிதார் என்பவாின் உத்தரவின்படி, திருச்சி மாவட்டம், மருங்காபுாி தாலுகாவைச் சேர்ந்த கலிங்கப்பட்டடி கிராமத்திற்கும் புதுக்கோட்டை தொண்டைமானார் ஆட்சிப் பகுதியில் உள்ள கல்லம்பட்டி கிராமத்திற்கும் எல்லை நிர்ணயம் செய்து எல்லைக் கல் நடப்பட்ட செய்திக் குறிப்பை இக்கல்வெட்டு தொிவிக்கிறது.

 

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இணக்கமான சூழல் இருந்ததையும் ராஜா விஜய இரகுநாத ராய தொண்டைமான் (1807-1825) ஆட்சிக் காலத்தின் போது இக்கல்வெட்டு நடப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

 

இந்த கள ஆய்வின் போது கரகமாடி ப.சரவணன், சுப்பிரமணியன், கா.சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.


சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துள்ள சன்னியாசி கல் கண்டெடுப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
15th century Sannyasis find with Grantha inscription

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தலைவராகத் தலைமை ஆசிரியர்  சந்திரசேகரன், பொறுப்பு ஆசிரியராக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் படி தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள், மாணவர்களுடன் களப் பயணம் சென்று பார்த்தபோது அது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னியாசி கல் அல்லது  கோமாரி கல் என்பது தெரிய வந்தது.

இது குறித்து ஆய்வு செய்த தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர்களான ஆசிரியர்கள் கூறும்போது, "மருத்துவ வசதி இல்லாத காலத்தில் தமிழகத்தில் நாட்டு மருத்துவம் மற்றும் மூலிகைகள் நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டன. மனிதனுக்கும் , விலங்குகளுக்கும் இம்முறையிலே நோய்கள் தீர்க்கப்பட்டன. மேலும் வழிபாட்டு முறைகளும் நோய் தீர்க்க பயன்படுத்தப்பட்டன.

15th century Sannyasis find with Grantha inscription

மாதநாயக்கன்பட்டி அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கருப்புசாமி கோவில் அருகே கிடப்பதும் சன்னியாசி கல் எனப்படும் கோமாரிக் கல் என்பது உறுதியாகிறது. இந்தக் கல்லில் முக்கோண வடிவில் மலை முகடுகள், பசு மாடு போன்ற அமைப்பு  வரையப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கல்லில் கிரந்த எழுத்துக்களில் ப்ர, பூ என்றும் பசு மாடு அருகில் சுப என்றும், அதனைச் சுற்றி நான்கு புறமும் சூலமும் போடப்பட்டுள்ளது. அதில் தூஞ்ச என்று எழுதியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன்னியாசி கல் கால்நடைகளுக்கு உடல் நலமில்லாதபோது இந்த கல்லின் அருகே கூட்டி வந்து இந்த கல்லை சுற்றி வந்து மூலிகைகளை கொடுத்து அல்லது அபிஷேகம் செய்தோ கால்நடைகளின் நோயை குணமாக்கியுள்ளனர்.

கோமாரி நோய் கால்நடைகளுக்கு அதிகமாக வந்தபோது இந்த வழக்கம் கிராமங்களில் இருந்துள்ளது. அதனால் இக்கல் சன்னியாசி கல், கோமாரிக் கல், மந்திரக் கல் என்று  அழைக்கப்படுகிறது. இது 600 ஆண்டுகள் பழமையான கல் ஆகும். இது கோவில் புனரமைக்கும் போது கடக்கால் குழியில் இருந்துள்ளது. அதனைப் பார்க்கும் போது ஏதோ எழுதி உள்ளது என்று வெளியில் எடுத்துப் போட்டுள்ளனர். எங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்று ஆய்வு செய்து பார்த்தோம். மேலும் இதனைப் பற்றிய தகவலுக்கு சென்னையில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சு. ராஜகோபால் அவர்களிடம் அனுப்பி உறுதி செய்தோம்." என்றனர்.