Skip to main content

வித்தியாசமான போராட்டம் நடத்திய விவசாயி!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

Transformer electricity


பெரம்பலூர் மாவட்டம் கோவில்பாளையம் கிராமத்தினை ஒட்டியுள்ளது புது ஏறி. இந்த பகுதியில் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் மூலம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கிணறுகளில் உள்ள பம்பு செட்டுக்கு மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு, அதன்மூலம் தண்ணீர் இறைத்து அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
 


அப்படிப்பட்ட இந்த டிரான்ஸ்பார்மர் கடந்த ஒரு மாதமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் விவசாயம் செய்துவந்த விவசாயிகள் தற்போது அவர்கள் பயிரிட்டுள்ள கரும்பு நெல் ஆகியவை தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகின்றன.

இந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக சீர் செய்து தருமாறு மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தரப்பில் பல்வேறு முறை கோரிக்கைகள் எழுத்து மூலம் கொடுத்துள்ளனர் விவசாயிகள். அதைப்பற்றி மின்சார வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. இதைக் கண்டித்து கோவில்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் காலை எட்டு மணிக்கு பழுதடைந்து நின்றிருந்த டிரான்ஸ்பார்மரில் 10 அடி உயரத்தில் ஏரி மின்கம்பத்தில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு அதன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துகொண்டு தனது வித்யாசமான போராட்டத்தைத் துவக்கினார்.
 

 


அவர் கூறும்போது, எனக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் 3 ஏக்கரில் கரும்பும், ஒரு ஏக்கரில் நெல்லும் பயிர் செய்துள்ளேன். இந்தப் பயிர்களுக்காக எனது கிணற்றில் இருந்து பம்புசெட் மூலம் மின் இணைப்புக் கொடுத்து மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் இறைத்து விவசாயம் செய்து வருகிறேன். கடந்த ஒரு மாதமாக இந்த டிரான்ஸ்பார்மர் பழுதாகி உள்ளதால் பயிர் செய்துள்ள கரும்பு நெல் எல்லாம் காய்ந்து கருகிவிட்டன.

அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் நம்மைப்போன்ற மனிதர்களாலேயே தாங்கமுடியவில்லை, தண்ணீரின்றி அந்தப் பயிர்கள் எப்படி வாழும்? இதனால் எனக்கு இரண்டரை லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில் என் குடும்பத்தை எப்படிக் காப்பாற்ற முடியும்? எனது விவசாய நிலத்தில் உள்ள கரும்பு நெல் ஆகிய வாடிய பயிரைக் கண்டு என் மனம் வாடியது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும் மின்சாரத்துறை அதிகாரிகள் இதைச் சரிசெய்ய முன் வரவில்லை. எனவே தான் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி கட்டிலில் அமர்ந்து போராட்டம் நடத்துகிறேன் என்றார் இளையராஜா. 

இவரின் போராட்டம் காவல்துறைக்கும் மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் தெரியவந்ததையடுத்து குன்னம் பகுதி மின்சார வாரிய இளநிலை பொறியாளர் அர்ச்சனா, இளையராஜாவிடம் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர் பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மர்  சரி செய்யும் நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார். இதையடுத்து மதியம் 2 மணியளவில் தனது ஆறு மணி நேர போராட்டத்தை முடித்துக்கொண்டு இளையராஜா கட்டிலை விட்டு கீழே இறங்கினார். இச்சம்பவம்  மின்சாரத்துறை அதிகாரிகள்  மத்தியிலும் அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

http://onelink.to/nknapp


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அப்படி வள்ளலார் பிறந்த தமிழகத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் விவசாயப் பயிர்கள் கருகிப் போனாலும் கவலை இல்லை என்று கல் மனம் படைத்தவர்களாக இருப்பது தான் வேதனையைத் தருகிறது என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.