Skip to main content

தீபாவளி இனாம் வசூல் விவரங்களை நோட்டு போட்டு எழுதி வைத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்!

Published on 14/11/2020 | Edited on 14/11/2020

 

dharmapuri district vigilance officers raid seized the money


தர்மபுரியில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் உள்ளிட்ட இருவர், தீபாவளி இனாம் விவரங்களை நோட்டு போட்டு எழுதி வைத்திருப்பது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

தர்மபுரி- சேலம் பிரதான சாலையில் உள்ள எஸ்பி அலுவலகம் எதிரில் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலகம் இயங்கி வருகிறது. 


இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ. 12) மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. தீபாவளியையொட்டி நடக்கும் இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு மற்ற ஊழியர்கள் தீபாவளி இனாம் பெயரில் லஞ்சம் வழங்குவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. 


இதையடுத்து, டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில் காவல்துறையினர், மதியம் 02.00 மணியளவில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். 


அந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் சாலை ஆய்வாளர் அங்கப்பன், உதவி செயற்பொறியாளர் இளங்கோ ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத 7.85 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நள்ளிரவு வரை கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.


சந்தேகித்தது போலவே அவர்கள் தீபாவளி இனாம் வசூல் வேட்டை நடத்தியிருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கைப்பற்றிய சில வெள்ளைத் தாள்களில், எந்தெந்த அதிகாரிகள், ஊழியர்கள்¢ எவ்வளவு இனாம் கொடுத்தனர் என்றும் குறித்து வைத்திருந்தனர். அவர்களின் கடந்த ஒரு வார வங்கி வரவு செலவு விவரங்களையும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.


சாலை ஆய்வாளர் அங்கப்பன், உதவி செயற்பொறியாளர் இளங்கோ ஆகிய இருவர் மீதும் லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.