Skip to main content

''காவல்நிலையத்தில் மரணம் நடப்பதற்கு முக்கியமான காரணமே இதுதான்''-டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி  

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

Interview with DGP Silenthrababu

 

இதுவரை தமிழகத்தில் ஆப்ரேசன் கஞ்சா திட்டத்தின் கீழ் கஞ்சா விற்பனை செய்த 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

 

சென்னை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''கமிஷனர் அலுவலகத்தில் இருக்கக்கூடிய போலீஸ் காவலர்களுக்கு தற்காப்பு பயிற்சி கொடுத்துள்ளோம். அதேபோல் பாதிப்பை ஏற்படுத்தாமல் லத்தி, துப்பாக்கி பயன்படுத்தாமல் குற்றவாளிகளைக் கைது செய்வது குறித்து பயிற்சி அளித்துள்ளோம். காவலர்களைத் தாக்கக் கூடிய ஒரு சில குற்றவாளிகளை அவர்களுக்கு எந்தவித காயமும் இல்லாமல், உயிரிழப்பும் இல்லாமல் எப்படி அவர்களை கைது செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் புல்லட் பயன்படுத்தி துப்பாக்கி வைத்திருக்கக்கூடிய குற்றவாளியை கைது செய்ய முடியும். அதற்கான பயிற்சிகள் கொடுத்திருக்கிறோம். பெண் காவலர்களுக்கும் சேர்த்து இந்த பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதனுடைய நோக்கம் எந்தவித காயமும் இல்லாமல், உயிர் சேதமும் இல்லாமல் குற்றவாளிகளை கைது செய்வதுதான். ஏனென்றால் சில வேளைகளில் காவல்நிலையத்தில் மரணம் நடப்பதற்கு முக்கியமான காரணமே குடிபோதையில் சில குற்றவாளிகள் காவலர்களை தாக்கும்போது அவர்களை லத்தியால் அடிக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.

 

எனவே அதுபோல் அடிக்காமல் இதுபோன்ற கருவிகளைப் பயன்படுத்தி அவர்களை கைது செய்வதற்கான பயிற்சி கொடுத்திருக்கிறோம். இதனால் காலப்போக்கில் எந்தவிதமான கைது மரணங்களும் கூடாது, நடக்காது என்பதற்காக இதைச் செய்கிறோம். ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 1, 2 ஆகியவற்றில் சேர்த்து 20,000 குற்றவாளிகளை கைது செய்திருக்கிறோம். சுமார் 200 பேரை ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறோம். மீண்டும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக இருந்தால் அவர்களை மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.