Skip to main content

“போலீஸ் கேஸ் வேண்டாம் சார்... எங்க அம்மா அப்பா பாவம்” - கண் கலங்கிய சிறுமி 

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

 deputy mayor who stopped the girl from being forced into marriage

 

சிதம்பரம் அருகே இருளர் பழங்குடி மாணவிக்கு நடக்க இருந்த கட்டாய குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தி, பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர்.

 

சிதம்பரம் அருகே கிள்ளை தளபதி நகரைச் சேர்ந்த மீனா, ராஜா  தம்பதியினருக்கு 17 வயது மற்றும் 11 வயதில் இரு மகளும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் 17 வயதுள்ள தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்குச் செல்கிறார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த ராஜாவின் அக்கா மகன் செல்வா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு வறுமையின் காரணமாகச் சிறுவயதில் தேவியை திருமண பந்தம் பேசி முடிவு செய்திருக்கிறார்கள்.

 

அதன்படி தற்போது கோடை விடுமுறை  நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு ராஜா குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு செல்வா குடும்பத்தையும் வரவழைத்துத் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இந்தத் திருமணத்திற்கு தேவிக்கு உடன்படவில்லை. பின்னர் அவர் எப்படியாவது 12 ஆம் வகுப்பு படித்து மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று எண்ணி இரவில் தூக்கம் இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு யாருக்கும் தெரியாமல் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நடந்தே வந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர்  இந்தச் சிறுமியைப் பார்த்து யார்? இந்த நேரத்தில் எங்கே போகிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு தேவி அழுதுகொண்டே நடந்த விபரத்தைச் சொன்னவுடன் அவர் தேவியை பேருந்து நிலையம் அழைத்து வந்து டீ, பன் வாங்கிக் கொடுத்து சிதம்பரத்திற்கு பேருந்து ஏற்றி அனுப்பியுள்ளார்.

 

பின்னர் சிதம்பரம் வந்த தேவி கிள்ளை தளபதி நகர் கிராம தலைவர் சின்னமணி வீட்டிற்குச் சென்று நடந்த தகவலைக் கூறி படிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் அதிர்ச்சி அடைந்து தேவியிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது தேவி, போலீஸ் கேஸ் வேண்டாம் சார் எங்க அப்பா, அம்மா பாவம் என்று கண் கலங்கியுள்ளார். இது அங்கிருந்த அனைவரின் கண்களைக் குளமாக்கியது. கிள்ளை ரவீந்திரன் தேவியின் அப்பா ராஜாவிற்கு ஃபோன் செய்து உடனே  கிள்ளைக்கு வர வேண்டும் இல்லையேல் நீ இருக்கும் இடம் தேடி போலீஸ் வரும் என்று எச்சரித்துள்ளார்.

 

இதனைக் கேட்ட ராஜா உடனே ஊருக்கு குடும்பத்துடன் திரும்பியுள்ளார். அப்போது கிள்ளை ரவீந்திரன், கிள்ளை தளபதி நகர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ராஜா குடும்பத்தை அழைத்து ராஜா மற்றும் அவரது மனைவிக்கு அறிவுரை வழங்கி,  தேவி கல்லூரி படிப்பு முடியும் வரை முழு செலவை அவரே ஏற்றுக் கொள்வதாகவும்  படிப்பைப் பற்றி இனி கவலை வேண்டாம் என்றும், எந்தத் தொந்தரவு இல்லாமல் படிக்க விடுங்க எனக்கூறி திருமண நேரத்தில் தேவையான உதவியையும் செய்வதாகக் கூறியுள்ளார். மேலும் கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் Al கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் தேவி மீது தனி கவனம் செலுத்தி நல்ல முறையில் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்குத் தேவையான பள்ளிக் கட்டணம் மற்றும் புத்தகம் உள்ளிட்டவை குறித்து அவரே ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

 

இதற்கு தேவியின் பெற்றோர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்தத் தகவல் அறிந்து கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரனுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாலியல் வன்கொடுமை‌; தீட்சிதர் தலைமறைவு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Woman molested in Chidambaram Nataraja Temple; Dikshitra disappeared

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை‌க்கு ஆளாக்கப்பட்ட நிலையில் தலைமறைவான தீட்சிதரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாயிலில் இயங்கி வரும் அன்னதான கூடத்தில் சிதம்பரம் அருகே சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா(46) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் பணி செய்து வருகிறார். தெற்கு சன்னதியில் வசிக்கும், நடராஜர் கோவிலில் தீட்சிதராகப் பணியாற்றும் மணிகண்டன் என்கிற கிருஷ்ணசாமி தீட்சிதர். கவிதா தெற்கு சன்னதியில் வேலைக்கு தனியாக வரும்போது சேலையை இழுத்து அவரது மேல் சட்டை மீது கை வைத்து பாலியல் சீண்டலில் கிருஷ்ணசாமி தீட்சிதர்  ஈடுபட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண் சிதம்பரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கிருஷ்ணசாமி தீட்சிதரை தேடி வருகின்றனர். நடராஜர் கோவில் தீட்சிதர் வேலைக்குச் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அரசுப் பள்ளி உணவில் அரணை; 92 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Food unsecurity in government school; 92 students admitted to hospital

சிதம்பரம் அருகே சாக்கான்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சாத்தங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் பிப்ரவரி 12 ஆம் தேதி திங்கட்கிழமை மதிய உணவு பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களை அழைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

தொடர்ந்து மாணவர்கள் அதிகமானோர் மயங்கியதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த சோதனையில் உணவில் அரணை விழுந்தது தெரியவந்தது. சிதம்பரம் அரசு மருத்துவமனை, புவனகிரி  மருத்துவமனை, சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 92 மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவ - மாணவிகளுக்கு ஆபத்து இல்லை என மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது.

Food unsecurity in government school; 92 students admitted to hospital

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் சாத்தங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த உணவுக் கூடத்தை சரி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சமையலர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி உணவுக் கூடங்களைத் திடீரென ஆய்வு மேற்கொண்டு குறைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள சிதம்பரம் - பிச்சாவரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.