Skip to main content

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை  தமிழ்நாடு அரசு கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்!

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

Demonstration demanding the Tamil Nadu government abandon enriched scheme

 

நியாய விலைக் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கைவிடக்  கோரி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்த் தேசியப் பேரியக்க மகளிர் அணியினர் முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர்.

 

இந்திய அரசின் வழிகாட்டுதல் படி தமிழ்நாடு அரசு 2023 ஏப்ரல் முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விலையில்லா அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவது என்றும், குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்களிலும், சத்துணவுத் திட்டத்திலும் செறிவூட்டப்பட்ட அரிசியைப் பயன்படுத்துவது என்றும் முடிவு செய்து அறிவித்திருக்கிறது. அரிசியைத் தூளாக்கி அதில் பெரஸ்-ப்யூமெரேட் என்ற இரும்புச்சத்து மருந்தையும், பாலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகியவற்றையும் கலந்து மருந்துத் தொழிற்சாலைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்பட்டு 100 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி என்ற விகிதத்தில் கலந்து வழங்கப்பட உள்ளது. 

 

இத்திட்டத்தை கண்டித்தும், திட்டத்தை திரும்பப்பெறக் கோரியும், உணவு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்க மகளிர் அணியினர் வியாழக்கிழமை சிதம்பரம் நகர அமைப்பாளர் தில்லைக்கரசி தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொறுப்பாளர்கள் புவனேஸ்வரி, பவித்தரா, தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் குபேரன், சுப்பிரமணிய சிவா, நகரச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமதாஸிடம் வழங்கினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மீனவர்கள் விவகாரம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Regarding the issue of fishermen, CM MK Stalin insistence

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை விரைவில் கூட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து தான் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். கடந்த வாரம் எழுதியிருந்த கடிதத்தில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரியிருந்தேன். இன்று (15.03.2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த கொந்தளிப்பும், விரக்தியும் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பிரச்சனைக்குத் தூதரக நடவடிக்கையின் மூலம் தீர்வு காண வேண்டியது மிக அவசியம் ஆகும். எனவே இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அதன்மூலம் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.