Skip to main content

வாழ்வாதாரத்திற்காக போராடும் 16 மாவட்ட விவசாயிகள்!

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

உயர்மின் கோபுர விவகாரம் தொடர்ந்து விவசாயிகளை கொந்தளிப்பில் ஆழ்த்தி வருகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருவண்ணாமலை உட்பட 16 மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

 

இந்த திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டால் தங்களின் விளைநிலத்தின் மதிப்பு மிக கடுமையாகக் குறையும், விளைபொருள்கள் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும், விவசாயம் செய்ய முடியாது,  வங்கிகளில் கடன் பெறுவதில் பெரும் சிரமம்  ஏற்படும், மொத்தத்தில் எங்களது  வாழ்வாதாரமே முழுமையாக  பறிபோகும் நிலை உருவாகிவிடும் என வேதனையுடன் கூறுவதோடு விளை நிலத்தை காக்க  பல கட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிட வேண்டும். 

w


விவசாயிகளுக்கு எதிராக உள்ள இந்திய தந்தி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக கேபிள் மூலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

 

 விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இதனால் இன்று ஈரோடு ஆட்சியர்  அலுவலகத்தில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும்  விவசாயிகளின் போராட்டத்தை தடுத்து நிறுத்த ஈரோட்டை சுற்றி கருங்கல்பாளையம் காவேரிக்கரை செக் போஸ்ட், சோலார், ரங்கம்பாளையம், திண்டல், அக்ரஹாரம் உட்பட 8 இடங்களில் தற்காலிக செக்போஸ்ட் அமைத்து 1000க்கும் மேற்பட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காத்திருப்பு போராட்டத்திற்காக வந்த விவசாயிகளை ஆங்காங்கே வலுகட்டாயமாக போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

 

இருப்பினும் பல விவசாயிகள் ஆட்சியர்  அலுவலகத்திற்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாக சென்றனர்.   தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் முனுசாமி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவரது தலைமையில் விவசாயிகள் பலர் தரையில் படுத்தபடி கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை குண்டு கட்டாக  கைது செய்தனர்.

 

போலீசாரின் தடைகளை தாண்டி, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு நுழைய முயன்ற பல விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், போலீசாரைக் கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவசாயிகள் ஈரோட்டில் 10 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 300 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார். 

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.