![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/CLWBkUgdAKW-jjAXfPb6D90MCtl7DKoY6FkiI_avepk/1541589876/sites/default/files/inline-images/rajini%20diwali1.jpg)
ஏழை, பணக்காரன் என இருதரப்பினரும் தீபாவளி பண்டிகைக்கு தங்களால் முடிந்த அளவுக்கு புதுத்துணிகள் எடுத்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு பலகாரங்கள் செய்தும் தங்களது குழந்தைகளுடன், குடும்பத்தாருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் பிள்ளைகள் இல்லாதவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானவர்கள், ஏதோ ஒரு சூழ்நிலையால் யாசகர்களாகிப்போனவர்கள், துணி எடுக்கவும், பட்டாசு வாங்கவும் வசதியற்றவர்கள் நாட்டில் லட்ச கணக்கில் உள்ளனர். அவர்கள் எப்படி தீபாவளி கொண்டாடுவார்கள்.
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/Z8IpVBOs_0Kk6V5t9l9rW5t8s_n9tMXn6okROMuqzwg/1541589898/sites/default/files/inline-images/rajini%20diwali%203.jpg)
தீபாவளி கொண்டாட்டத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் அவர்களைப்பற்றி கண்டுக்கொள்வதில்லை. ஒருச்சிலர் முதியோர் இல்லத்துக்கும், ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்துக்கும் சென்று தீபாவளி கொண்டாடுகிறார்கள். முதியோர் இல்லத்தில், ஆதரவற்றோர் இல்லத்தில் சேரமுடியாதவர்கள் எப்படி கொண்டாடுவார்கள் என யோசித்து இந்த தீபாவளியை அவர்களுடன் கொண்டாடுவோம் என முடிவு செய்து களத்தில் இறங்கி, இயாலமையால் வாடும் 100 பேருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்.
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/C9LqeKFtX2NFh9girlP6KqQNstSUkwYSAlpBX-eaJ8U/1541589920/sites/default/files/inline-images/rajini%20diwali%204.jpg)
வேலூர் மாவட்டம், ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செவாக இருப்பவர் சோளிங்கர் ரவி. சோளிங்கர் நகரில் நரசிம்மர் கோயில், பெருமாள் கோயில் பகுதிகளில் யாருமற்ற அநாதைகளாக உள்ள யாசகர்கள், அநாதைகள், வயதானவர்களை தீபாவளிக்கு இரண்டு நாளூக்கு முன்பு சந்தித்து, உங்களுடன் தீபாவளி கொண்டாட விரும்புகிறேன் வாருங்கள் என அழைத்துள்ளார். அதன்படி கடந்த நவம்பர் 5ந்தேதி இரவு சோளிங்கர் டூ அரக்கோணம் சாலையில், நரசிம்மர் கோயில் அருகே திறந்தவெளி மைதானத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தார்.
யாருமற்ற அநாதைகள்தானே என ஏனோதானோ என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யாமல் நேர்த்தியாக வருபவர்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டு அவர்கள் அதில் உட்காரவைக்கப்பட்டனர். அதோடு, அவர்கள் அமர்ந்து உணவு உண்ண டேபிள்கள் போடப்பட்டன. வந்திருந்தவர்களுக்கு புடவை, வேட்டி, துண்டு, இனிப்பு பெட்டி மற்றும் உணவு வழங்கினார் ரஜினி மக்கள் மன்ற மா.செ ரவி.
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/Yt4XtmdpEgHzn3wQW2IEOWnUrrY8MLVCyoRExMWo_rg/1541589972/sites/default/files/inline-images/rajini%20divwali.jpg)
இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் ரவி, எங்கள் தலைவர் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக வருடா வருடம், மாணவர்களுடனும், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுடனும், ஆதரவற்றோருடனும் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் உங்களுடன் கொண்டாட வேண்டும் என்று என் மனம் விரும்பியது. காரணம் இங்கே உள்ளவர்கள் அனைவரும் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களும், உடலால் உழைக்க முடியாதவர்களும் தான். நீங்கள் அனைவரும் பண்டிகை காலங்களில் கூட நமக்கு யாருமில்லையே, அன்பு செலுத்த ஒரு உயிர் இல்லையே என மனதால் வாடி கண்ணீர் விட்டுக்கொண்டு இருப்பவர்கள். அதனால் தான் ஏதோ என்னால் முடிந்த வரை ஒரு பண்டிகையாவது நான் உங்களோடு உங்கள் மகனாகவோ, தம்பியாகவோ, உறவினராகவோ எங்கள் தலைவரின் சார்பில் கொண்டாட விரும்பினேன். பிரிவு என்பது எத்தனை துயரமானது என்பது நான் அறிந்தவன். நான் என் பெற்றோரை சிறு வயதிலேயே இழந்தவன் என நெகிழ்ந்தவர், இந்த தீபாவளியை நான் உங்களோடு சேர்ந்து கொண்டாடுவது என் அம்மா, அப்பாவோடு கொண்டாடியது போன்றொரு சந்தோசம் தருகிறது என்று கண்கலங்கினார்.
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/Hr8b7HzC8moKouIz9EwcuWBYrmo6Lu7t-8r89czC-Ng/1541590004/sites/default/files/inline-images/rajini%20diwalil%205.jpg)
நிகழ்ச்சிக்கு பின்னர் கலர் கலரான மத்தாப்பு, புஷ்வானம் போன்றவற்றை வந்திருந்தார்களூக்கு தந்து அவர்களை வெடிக்க வைத்து அவர்களின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை ரஜினி மக்கள் மன்றத்தினரோடு அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களும் பார்த்து நெகிழ்ந்தனர். இயலாதவர்களுடன் தீபாவளியை கொணடாடி மகிழ்ச்சிகரமாக்கி அவர்களை அனுப்பிவைத்தனர்.
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/gXqKvflBXoYNkFM1DJCnSNjzkGgICBnmBqEe35o-bW4/1541590038/sites/default/files/inline-images/rajini%20diwalin2.jpg)
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் நீதி (எ) அருணாச்சலம், மாவட்ட விவசாய அணி செயலாளர் கே. அருணகிரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் V.சிவா போன்றோர் கலந்துக்கொண்டனர்.