Skip to main content

கடன் பிரச்சனையால் தந்தை தற்கொலை... தந்தையுடன் மகளும் இறந்த சோகம்!

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

Debt problem father and daughter passes away


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா நாகாம்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (38). இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவியும் ஆர்த்தீஸ்வரி என்ற 7 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில், விவசாயியான ஐயப்பன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதே ஊரில் டீக்கடை நடத்திவரும் ராஜசேகர் என்பவர் மூலம், திண்டிவனம் அருகில் உள்ள எடையன்குளம் என்ற ஊரைச் சேர்ந்த சம்பத் என்பவரிடம், வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு 25,000 ரூபாய்க் கடன் பெற்றுள்ளார்.

 

அதன்பிறகு, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார் ஐயப்பன். இதனால், கடன் தொகை 25,000-ஐ வட்டியுடன் சேர்த்து 50 ஆயிரமாக திருப்பித் தர வேண்டும், இல்லாவிட்டால் 2 லட்ச ரூபாய்க்கு உனது பத்திரத்தில் சொத்துகளை எழுதி கையெழுத்திட்டுத் தர வேண்டும். அதுவும் இல்லை என்றால், உனது சொத்துகளை ஜப்தி செய்துகொள்வோம் என்று கூறி ஐயப்பனை சம்பத் உள்ளிட்ட இருவரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். 

 

இதனால், விரக்தியடைந்த ஐயப்பன், கடந்த 7ஆம் தேதி மாலை, 5 மணியளவில், தனது வீட்டில் குளிர்பானம் வாங்கி வந்து, அதில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதனால் மயக்கமுற்ற ஐயப்பன், வாந்தி எடுத்துள்ளார். அதேநேரம் அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஐயப்பனின் மகள் ஆர்த்தீஸ்வரி, விஷம் கலந்து இருப்பது தெரியாமல் அந்தக் குளிர்பானத்தை எடுத்துக் குடித்துள்ளார். 


இதனால் தந்தை, மகள் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஐயப்பன், ஆர்த்தீஸ்வரி இருவரும் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். 

 

cnc


இருவரின் இறப்பிற்குக் காரணமானவர்கள் மீது, கந்து வட்டிக் கொடுமைப் பிரிவில் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என்று கூறி, நேற்று காலை, ஐயப்பன் மனைவி மங்கையர்க்கரசி மற்றும் அவரது உறவினர்கள், இறந்துபோன இருவரது உடல்களையும் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி ராஜேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஆகியோர் அங்குவந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

இந்த கந்துவட்டிக் கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் மற்றொருவரை விரைவில் கைது செய்வதற்குத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் அதிகாரிகள் சமாதானம் கூறினர். அதை ஏற்று இறந்துபோன இருவரது உடலையும் பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், நேற்று மாலை 7 மணிக்கு அடக்கம் செய்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ராஜேஸ் தாஷுக்கு சிறைத்தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Former DGP Rajesh Das gets 3 jail sentence

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி, அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கத் தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று, ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.