Skip to main content

திக்கெட்டும் பரவவேண்டும்; கலைஞர் பிறந்த மண்ணில் ஒரு பெண்ணின் சமூக புரட்சி!

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Daughter performed funeral rites for mother in Tiruvarur
யமுனம்மாள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் இராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மனைவி லெட்சுமி அம்மாள். இவர்களுக்கு பிறந்த சில ஆண், பெண் குழந்தைகள் ஏதோ ஒரு காரணத்தால் இறந்துபோக மிஞ்சியது யமுனம்மாள் என்கிற ஒரு பெண்குழந்தை மட்டுமே. யமுனம்மாள் சிறுவயதில் இருக்கும் போதே, இவரது தந்தை ஆண்வாரிசுக்காக இன்னொரு திருமணம் பண்ணிக்கவா என்று லட்சுமி அம்மாளிடம் கேட்க அவரும் மனமுவந்து தனது உறவுக்கார பெண்ணையே இரண்டாம் திருமணம் செய்துவைத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து லட்சுமி அம்மாள் தனது மகள் யமுனம்மாளை 10 ஆம் வகுப்புவரை படிக்கவைத்து திருமணமும் செய்துவைத்தார். பின்னர் லட்சுமியம்மாள் மகள் வீட்டிலேயே வசித்தார். இந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக ஜூன் 11 ஆம் தேதி லட்சுமியம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து மறுநாள் லட்சுமியம்மாளுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. அப்போது லட்சுமியம்மாளுக்கு ஆண் வாரிசு இல்லாததால் யார் கொள்ளி போடுவது என்று ஒரு பிரச்சனை ஏற்பட்டது. சிலர் நாங்கள் செய்கிறோம் என்று முன்வர அங்கு சலசலப்பு ஏற்பட்டது. எனது தாய்க்கு நான்தான் ஒரே மகள் அதனால் நான் கொள்ளிவைக்கிறேன் என்று யமுனா முன்வந்துள்ளார். அப்போது ஊர் பெரியவர்கள் பெண்கள் மயானத்திற்கு வந்து கொள்ளி வைக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். என் தாய்க்கு நான் கொள்ளிவைபேன் என்று ஆவேசமாக கூறிய யமுனா அதற்கான ஏற்படுகளை செய்யத் தொடங்கினார்.

Daughter performed funeral rites for mother in Tiruvarur

அதன்படி தாயின் இறுதி ஊர்வலத்தின் முன்பாக தீச்சட்டி ஏந்தியபடியே மயானம் சென்றார். எரிக்க தயார் செய்யப்பட்ட தன்தாயிக்காக பனிக்குடம், மண்குடம் உடைத்து  இறுதிச் சடங்கை நிறைவேற்றினார். யமுனம்மாள் இந்தச் செயலை அக்கிராம மக்கள், வெளியூரில் இருந்து வந்த உறவினர்கள், நண்பர்கள் பலரும் அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் பார்த்தனர். 

ஆட்சியதிகாரம் மூலமாக பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட தமிழ்நாட்டில் தான் இன்றளவும் பெண்களை மயனத்திற்கு வரக்கூடாது, ஆண் பிள்ளை இல்லாமல் இறந்துப்போன தங்கள் தாய் தந்தையருக்கு பென்கள் கொள்ளி வைக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடுகள் இன்றளவும் உள்ளன. ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்காத தாய் தந்தையர் இறக்கும்போது, அவர்களுடைய பெண் பிள்ளைகள் தங்களது தாய் தந்தையருக்கு கொள்ளி வைக்க தங்களது உறவினர்களிடம் கெஞ்சும் நிகழ்வுகள் காணும் பொழுது இறப்பைத் தாண்டியும் அவர்களின் கெஞ்சல் மனதை உருக்க வைக்கும். ஆனால், கலைஞர் பிறந்த மண்ணில் காலத்தால் மறக்கமுடியாத சம்பவம் யமுனம்மாள் தனது தாய்க்கு இறுதி சடங்கு செய்துள்ளார். இது போன்ற நிகழ்வு திக்கெட்டும் பரவ வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள் என்கின்றனர் பெரியாரை பின்பற்றுவபவர்கள். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் விபத்து; ஒருவர் பலியான சோகம்! 

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Thiruvarur district near Mannargudi Thiranagapuram incident

நாட்டு வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருத்தநாகபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலை விஜய செல்வகுமார் என்பவருக்கு சொந்தமானதாகும். இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் இங்கு நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென இந்த ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து ஏற்பட்டபோது ஆலையில் மூன்று பேர் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் வெடி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது ஆலையில் பணியில் ஈடுபட்டு சதீஷ்குமார் என்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த வெடி விபத்தில் காயம் அடைந்த இரண்டு பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

என் மகளுக்கு என்னாச்சு? - இரவு பகலாக ஸ்டேஷனுக்கும் வீட்டிற்கும் அலையும் தாய்!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
mother has complains her daughter missing for 12 days to police station

கோயமுத்தூர் பன்னிமடை அருகேயுள்ள தாளியூரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர்களிருவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் 12 ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகள் மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் செல்வபுரத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் ராஜ்குமார் 2021 ஜனவரி 1ஆம் தேதி வேறொரு பெண்ணை 2 ஆவது திருமணம் செய்து கொண்டு சென்று விட்டாராம். இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி தனது தாயார் உதவியுடன், கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று வரும் நிலையில் மகள் அபிராமி மற்றும் மகன் உள்ளிட்டோருடன் வசித்து வருகிறார். அபிராமி (12) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 8 ஆம் வகுப்புச் செல்லவுள்ளார்.

இந்நிலையில் மே 18 ஆம் தேதி செல்வபுரத்தில் உள்ள வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. வீட்டை விட்டுச் செல்லும்போது அபிராமி கருப்பு நிற டி சர்ட், நீல நிற பேன்ட்டும் அணிந்த நிலையில் தனது மடிக் கணினியையும் உடன் எடுத்துச் சென்றுள்ளாராம். இதுகுறித்து மகேஸ்வரி புகாரில் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் மறுநாளே புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர் (குழந்தையின் தந்தை) அழைத்துச் சென்றிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியை மீட்கும் முயற்சியில் போலீஸார் மெத்தனம் காட்டி வருகின்றனர். சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆதரவற்ற பெண் என்பதால் எனது புகார் கிடப்பில் போடப் பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்கள் அல்லது செல்வந்தர் வீட்டு குழந்தைகள் மாயமாகியிருந்தால் இந்நேரம் குழந்தையை மீட்டிருப்பார்கள். கடந்த 12 நாட்களாக பகல் இரவு எனப் பாராமல் காவல் நிலையத்துக்கும் வீட்டுக்கும் அலைந்து வருவதால் வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் காலமும் நெருங்கி வருவதால் என்ன செய்வதென புரியவில்லை என அழுது புலம்புகிறார் மகேஸ்வரி.