Skip to main content

செல்போன் பயன்படுத்திய மகளை மதுபோதையில் கொலை செய்த தாய்!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021
daughter passes away due to the reason of her mom

 

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கணுவாய்ப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார் மகாலட்சுமி என்ற நதியா. இவருக்கும் புளியந்தோப்பு சோமையனூரை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கும் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரியதர்ஷினி (13) என்ற மகளும், நிதீஷ் குமார்(12) என்ற மகனும் உள்ளனர். சரவணகுமார்  கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமார்  கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

 

சரவணகுமார் இறந்ததிலிருந்து நதியா தனது தாய் வீடான கணுவாய்ப்பாளையம் பகுதியில் தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நதியா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதாகவும், இதனால் அவருடைய குழந்தைகளைச் சரியாகக் கவனிப்பதில்லை என்றும் நதியாவின் தாயார் நாகமணி தன்னுடைய பேரக்குழந்தைகளைத் தானே வளர்ப்பதாகச் சொல்லி, நதியாவை  கண்டித்து அடிக்கடி சண்டையிட்டிருக்கிறார். ஆனாலும் நதியா அதிகமாக செல்போனில் பேசுவதை விடவில்லை. நதியாவிற்கும், தாய் நாகமணிக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் நதியா தனது தாயைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

 

இதனால் மகளிடம் கோபித்துக்கொண்டு தனது அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று தான் வீடு திரும்பியுள்ளார் நாகமணி. இந்நிலையில் நேற்றிரவும் இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும், அப்போது, நீ ஏன் அடிக்கடி செல்போன் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று தனது மகளைக் கண்டித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு சிறிது நேரத்தில் இருவரும் தாக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆத்திரம் அடங்காத நாகமணி இன்று அதிகாலை சுமார் 12.30 மணிக்குத் தூங்கிக் கொண்டிருந்த தனது மகளை ஆட்டுக்கல்லினை (மாவு ஆட்டும் கல்) பின்னந்தலையில் தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார்.

 

இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை காவல் துறையினர் மற்றும் தடயவியல் துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும்,சம்பவ இடத்தை மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி ஜெய்சிங் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும், தாய் நாகமணியை கைது செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் பெற்ற தாயே தனது மகள் தலையில் குழவிக்கல்லினை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.