திருச்சி மணப்பாறை அருகேயுள்ள வெள்ளையம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இந்நிலையில் 2வது மகள் தனுஜாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பழனிசாமி குழந்தையைத் தூக்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது பன்னாங்கொம்பு அருகே சென்ற போது இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே தனுஜா உயிரிழந்தார். இறுதி சடங்கு முடிந்த பின் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தனுஜாவின் ஒன்பதாம் நாள் ஈமக் காரியங்களை செய்து கொண்டிருந்தனர். அப்போது, தனக்கு ஈம காரியங்கள் செய்ய வேண்டாம் எனவும் மூன்று ஆண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன் எனவும் தனுஜா அருள் வாக்கு கூறியுள்ளார். இதன் பின் தனுஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீடு அருகே குழந்தைக்கு ஒரு அடி உயரச் சிலை எழுப்பி கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து சிறுமி தனுஜாவிற்கு சிலை எடுத்து கோவில் ஒன்றைக் கட்டியுள்ளனர். இதன் பின்னர், உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் விழா நடத்தி வருகின்றனர். மணப்பாறையில் விபத்தில் உயிரிழந்த மகளுக்குப் பெற்றோர் கோவில் கட்டி ஆண்டு தோறும் திருவிழா எடுத்து வருவது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.