Skip to main content

கொடைக்கானல் அருகே தனியார் சொகுசு விடுதியில் கலாச்சார நிகழ்ச்சி நடத்த தடை! ஏமாற்றத்துடன் சென்ற சுற்றுலாப்பயணிகள்!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

கொடைக்கானல் அருகே தனியார் சொகுசு விடுதியில் கலை நிகழ்ச்சி நடத்த மதுரை ஐகோர்ட் திடீர் தடை விதித்தது. இதனால் டெண்டு போட்டும் கூட கலை நிகழ்ச்சி  நடத்தமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.கொடைக்கானல் மேல்மலை பகுதியிலுள்ள  பூம்பாறை கிராமத்தில் கிளப் இந்தியா ரிசார்ட் மற்றும் மெட்ரோ வாட்டர் என்ற சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலின் இயக்குனர் போதி சாத்வி காந்த்ராஜ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பூம்பாறையில் உள்ள சொகுசு விடுதி கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு முறையாக உரிமை பெறப்பட்டுள்ளது. கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த கலாச்சார மையம் நடத்தி வருகிறோம் கலாச்சார மையம் சார்பில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை இசை கலை மற்றும் உணவு திருவிழா நடத்தப்படும்.

 

Cultural event  banned in Kodaikanal private luxury hotel

 



இதில் தேர்வு செய்யப்பட்ட 1000 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இசை கலை மற்றும் உணவு திருவிழா நடத்த அனுமதி கேட்டு கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மனு கொடுத்தோம். அவர் அனுமதி மறுத்துவிட்டார். எனவே அதை ரத்து செய்து எங்கள் ஓட்டலில் கலாச்சார நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தோம். இந்த வழக்கு விசாரணையின் போது, குடியிருப்பு மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒலி மாசு ஏற்படாமல் நிகழ்ச்சி நடத்தப்படும் என ஹோட்டல் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஹோட்டலில் நிகழ்ச்சி நடத்திக்கொள்ள அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இணையதளம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பெயர்களை பதிவு செய்தனர். இதற்காக ரிசாத் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் டெண்டு அமைக்கப்பட்டது. கலை, இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடு துரிதமாக நடந்தது. மேலும் உணவு தயாரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையே நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் மனுதாரரின் சொகுசு விடுதி ஒன்றை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 

 

Cultural event  banned in Kodaikanal private luxury hotel


 

 

இங்கு 30 அறைகள் மட்டுமே உள்ள நிலையில் ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே அசம்பாதங்களை தடுக்கும் வகையில் கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள சொகுசு விடுதியில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைச்சாமி, ரவீந்திரன் ஆகியோர் கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கலை நிகழ்ச்சி நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர். இதற்கிடையே ஐகோர்ட் தடை விதித்திருப்பது அறியாத ஆண் பெண்கள் பலர் பூம்பாறையில் உள்ள சொகுசு விடுதி வளாகத்திற்கு நேற்று மாலை குவிந்தனர். இதில் பெரும்பாலானோர் வெளிமாநில வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர்.

தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் வந்திருந்தனர். இவர்கள் விலையுயர்ந்த கார்களில் அங்கு வந்து முகாமிட்டு இருந்தனர். ஒரு சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் அருகே அமர்ந்திருந்தனர். இந்த விஷயம்  கொடைக்கானல் டிஎஸ்பி ஆத்மநாதன் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், முருகன் ஆகியோருக்கு தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

 



பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஐகோர்ட் தடை விதித்து இருப்பதால் திரும்பி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனை அடுத்து அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள குண்டுபட்டியில் ஒரு தனியார் நடத்திய கலை நிகழ்ச்சியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதன் மூலம் 270 க்கும் மேற்பட்ட ஆண் பெண்கள் சிக்கினார்கள். இது கொடைக்கானல் மட்டுமின்றி தமிழகத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதன் எதிரொலியாக போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின் பேரில் கொடைக்கானல் பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். குறிப்பாக பழனி கொடைக்கானல், வத்தலக்குண்டு கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். அனைத்து வாகனங்களிலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன போலீசாருடன் இணைந்து வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் கொடைக் கானலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.