Skip to main content

என்னை காதலித்து விட்டு வேறொருவருடன் திருமணமா? இளைஞர் செய்த வெறிச்செயல்

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

Cuddalore young man attacked lady

 

கடந்த 25 ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி கிராமத்தில் உள்ள  காட்டுப் பகுதியில் 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில், உயிருக்குப் போராடும் நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

 

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்ததில் கொடூரமாக தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண் குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் என்பவரின் இரண்டாவது மகள் ரம்யா கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அத்துடன் பி.எஸ்.சி பட்டப்படிப்பு முடித்த இப்பெண்ணுக்கு, வருகிற 10 ஆம் தேதி ஆண்டிமடத்தை சேர்ந்த பையனுடன்,  திருமண செய்து வைக்க அப்பெண்ணின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருப்பதும் தெரியவந்தது.

 

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் ரம்யா கிருஷ்ணனின் Handbag, மொபைல் போனுடன், மற்றொரு மொபைல் போனும், இருசக்கர வாகனமும் இருப்பதை கண்ட காவல்துறையினர் அவற்றை கைப்பற்றி, யாருடையது என தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.  சம்பவ இடத்தில் கிடைத்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் இரண்டும் கார்மாங்குடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான ஸ்ரீதரை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். இதையடுத்து நேற்று (27.5.2022) மது போதையில் இருந்த ஸ்ரீதரை கைது செய்த்தனர். அப்போது ஸ்ரீதர் மது போதையில் இருந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அப்போது ஸ்ரீதர் கைகளில் பிளேடால் கிழித்து கொண்டு, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாததால், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் ஸ்ரீதர் சில வருடங்களுக்கு முன்பு, திருமுட்டம் பகுதியில் கல்லூரிப் படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, அக்கல்லூரியில் பயின்ற பெண்ணின் மூலமாக, குறிஞ்சிப்பாடி பெத்தநாயக்கன்குப்பத்தை சேர்ந்த ரம்யா கிருஷ்ணனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இத்தொடர்பு நாளடைவில் காதலாக மாறி, ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனுக்கு வேறொரு பையனுடன், அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்தனர். இது குறித்து அறிந்த ஸ்ரீதர், ரம்யா கிருஷ்ணனிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, உன்னை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். ஸ்ரீதரை பார்க்க வந்த ரம்யாகிருஷ்ணனை கார்மாங்குடி கிராமத்தில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு,  அழைத்து சென்ற ஸ்ரீதர், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியால், தலையில் ஓங்கி அடித்துள்ளார். 'என்னை காதலித்து விட்டு, வேறு ஒருவருடன் எவ்வாறு திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டாய்? எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது' என கூறியவாறு, இரும்பு சுத்தியால் பலமுறை தலையிலேயே அடித்துள்ளார்.  இத்தாக்குதலால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ரம்யா கிருஷ்ணனை தரதரவென இழுத்துக் கொண்டு அருகில் உள்ள முட்புதர்கள் கொண்ட காட்டுப்பகுதியில் தூக்கி வீசியுள்ளார். பின்னர் அங்கிருந்து ஆற்றுப் பகுதி வழியாக நடந்தே தப்பிச் சென்றுள்ளார். 

 

Cuddalore young man attacked lady

 

இதனிடையே கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒரு சமூகம் என்பதாலும், தாக்குதல் நடத்திய இளைஞர் மற்றொரு சமூகம் என்பதாலும் பா.ம.க மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் பா.ம.கவினர் மற்றும் பெண்ணின் உறவினர்கள் இளம்பெண்ணை கடத்தி சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தியவர் மீதும், அவருக்கு துணையாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று இரவு குறிஞ்சிப்பாடியில், கடலூர் - விருத்தாசலம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பட்டப்பகலில் இளம்பெண்ணை இரும்பு சுத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.