Skip to main content

சிறைக்கைதி மரணத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்... -மக்கள் உரிமை கூட்டமைப்பு கோரிக்கை

Published on 09/11/2020 | Edited on 09/11/2020

 

cuddalore virudhachalam selvamurugan case sugumaran request

 

 

விருத்தாசலத்தில் சிறைக்கைதி மரணமடைந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 

“கடலூர் மாவட்டம், காடாம்புலியூரைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் (வயது 35) என்பவரை கடந்த 28.10.2020 அன்று நெய்வேலி நகர காவல்துறையினர் பிடித்து சென்றனர். பின்னர் அவரை காவல்நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை ஒத்துக்கொள்ள சொல்லி கடுமையாக அடித்து துன்புறுத்தி சித்தரவதைச் செய்துள்ளனர். 

 

இந்நிலையில், செல்வமுருகன் காணாமல் போனது குறித்து வடலூர், நெய்வேலி காவல்நிலையங்களில் அவரது மனைவி பிரேமா அளித்த புகாரை காவல்துறையினர் பெற்றுக் கொள்ளாமல் மிரட்டி அனுப்பியுள்ளனர். செல்வமுருகனை நெய்வேலி நகரக் காவல் நிலையத்திலும், அங்குள்ள தனியார் விடுதி ஒன்றிலும் வைத்து கடும் சித்தரவதை செய்துள்ளனர். 

 

மேலும், செல்வமுருகனை தேடி நெய்வேலி நகரக் காவல்நிலையத்திற்கு சென்ற பிரேமாவிடம் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், தனியார் தங்கும் விடுதி ஒன்றுக்கு வரச் சொல்லி 10 பவுன் நகையை கொண்டுவந்து தருமாறு கேட்டுள்ளார். இல்லையேல், அவரது கணவர் மீது வழக்குப்போட்டுச் சிறையில் தள்ளிவிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும், பின்னர் அவரிடம் ரூபாய் 5000 தருமாறு கேட்டு மிரட்டிப் பெற்றுள்ளார்.

 

இதனிடையே, காவல்துறையினர் செல்வமுருகன் மீது பொய்யாக திருட்டு வழக்குப்பதிவு செய்து, கடந்த 31.10.2020 அன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 04.11.2020 அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறையிலிருந்த செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது இறந்து போனார். 

 

நெய்வேலி காவல் நிலையத்திலும், விருத்தாசலம் கிளைச் சிறையிலும் செல்வமுருகனை அவரது மனைவி பிரேமா சென்று பார்த்த போது அவரது உடல்நிலைக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. அப்போது திருட்டு வழக்குகளை ஒப்புக்கொள்ள சொல்லி தன்னைக் கடுமையாக அடித்து உதைத்து சித்தரவதை செய்ததாகவும் கூறியுள்ளார்.

 

நெய்வேலி நகர காவல்நிலைய காவல்துறையினர் 28.10.2020 முதல் 31.10.2020 வரையில் 3 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்தரவதை செய்ததே செல்வமுருகன் இறப்புக்கு காரணமாகும். சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பின்னரும் தமிழகக் காவல்துறையினர் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.

 

தற்போது இச்சம்பவம் குறித்து நெய்வேலி நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, அவர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

கடந்த 2010ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் குறவர் சமூகத்தை சேர்ந்த ரவி என்பவரை காவல்துறையினர் அடித்து கொன்றனர். இவ்வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் புலன்விசாரணை மேற்கொண்டனர். ஆனால், இறுதியில் இது காவல்நிலைய மரணம் அல்ல என நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்து இவ்வழக்கை முடித்துவிட்டனர். இதுபோல் நடக்காமல் இவ்வழக்கில் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரின் விசாரணை நடைபெறுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். 

 

எனவே, செல்வமுருகன் காவலில் இறந்த சம்பவத்தில் தொடர்புடைய நெய்வேலி நகர காவல்நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிந்து உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடும், இறந்துபோன செல்வமுருகனின் மனைவிக்கு தகுதிகேற்ப அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.